ரயில்வே தேர்வுக்கு எதிர்ப்பு... பீகாரில் வெடித்த போராட்டம் - பயணிகள் ரயிலுக்கு தீவைத்ததால் பதற்றம்
பீகார் மாநிலத்தில் ரயில்வே தேர்வு முறையை கண்டித்து ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் ரயிலுக்கு தீவைத்ததால் பதற்றம் உருவாகியுள்ளது.
பாட்னா: ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கூறி, பீகாரில் மாணவர்கள் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து மாணவர்கள், காவல்துறையினர் இடையே மோதல் வெடித்தது. தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், மாணவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
பீகார் மாநிலத்தில் ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 15ஆம் தேதி வெளியாகின. தேர்வு முடிவுகள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு 2ம் நிலை தேர்வுகள் நடைபெறும் என்ற ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பீகார் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
தேர்வு அறிவிக்கும் போது எதுவும் தெரிவிக்காமல் திடீரென இரண்டாம் நிலை தேர்வு நடைபெறும் என்பதை ஏற்க முடியாது என மாணவர்கள் தெரிவித்தனர். ரயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைக்கேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி, பீகார் மாநிலம் கயாவில் அந்த தேர்வு எழுதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் தீவிரமடைந்ததை அடுத்து மாணவர்கள், காவல்துறையினர் இடையே மோதல் வெடித்தது. தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், மாணவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
அப்போது கயா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அப்போது ரயில் பெட்டியில் தீப்பற்றி கரும்புகை வெளியேறிய காட்சிகள் பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது. சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜெகனாபாத்தில் உள்ள காவல்நிலையத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். அங்கு பிரதமர் மோடியின் உருவப்படத்தை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்து எரித்தனர். மத்திய அரசுக்கு எதிராகவும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோஷங்களும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2ஆம் நிலை தேர்வு முழுக்க ஊழலுக்கே பயன்படும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தோடு மத்திய அரசின் ரயில்வே வாரியம் விளையாடுவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ரயில்வே தேர்வு வாரியம், தேர்வு குறித்த அறிவிப்பாணையில் இரண்டு கட்ட தேர்வு என்பது முறைப்படி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.
மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு, சில போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் தூண்டுதலே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அனைத்து போட்டித் தேர்வு பயிற்சி மையங்களையும் கண்காணித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 6 போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் மீதும், அடையாளம் தெரியாத 150 பேரின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இதுவரை வன்முறையில் ஈடுபட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாட்னா மாவட்ட மூத்த காவல்கண்காணிப்பாளர் மாணவ்ஜித் சிங் தில்லன் கூறியுள்ளார். ரயில்வே தேர்வு எழுதியுள்ள ஏராளமானோர் பீகார் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால், பல இடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.