பீகார் புதிய ஆட்சி- ஜேடியூவுக்கு முதல்வர்; ஆர்ஜேடிக்கு து.முதல்வர், உள்துறை; காங்.-க்கு சபாநாயகர்?
பாட்னா: பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) புதிய ஆட்சி அமைய உள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான இந்த ஆட்சியில் ஆர்ஜேடிக்கு துணை முதல்வர் பதவி மற்றும் உள்துறை அமைச்சர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக ஜேடியூ கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் அறிவித்தார். இதனால் பாஜக- ஜேடியூவின் 2 ஆண்டுகால கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இதனையடுத்து ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஜேடியூ, நிதிஷ்குமார் தலைமையில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது. இதனால் பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
பாட்னாவில் துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் வீட்டில் பாஜக மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளும் நிதிஷ்குமாரின் அறிவிப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டமும் இன்று மாலை நடைபெற உள்ளது.
இதேபோல் ஆர்ஜேடி எம்.எல்.ஏக்கள் கூட்டம், லாலு பிரசாத் யாதவ் வீட்டில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்ஜேடியின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பங்கேற்றனர். இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் நிதிஷ்குமாருடன் தேஜஸ்வி யாதவ் இணைந்து ஆளுநரை சந்தித்து புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதிஷ்குமார் தலைமையிலான புதிய ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏக்கள் பட்டியலும் ஆளுநரிடம் வழங்கப்பட உள்ளது.
இதனிடையே ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் புதிய ஆட்சியில் எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சரவை இடங்கள் என்பது தொடர்பான விவாதங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன்படி ஜேடியூவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படுகிறது; துணை முதல்வர் பதவி மற்றும் உள்துறை அமைச்சர் பதவி ஆர்ஜேடிக்கு கொடுக்கப்படும்; சபாநாயகர் பதவி, காங்கிரஸுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் துணை முதல்வர் பதவி கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஜேடியூவில் நிதிஷ்குமார் முதல்வர்; ஆர்ஜேடியில் தேஜஸ்வி யாதவ்-க்கு துணை முதல்வர் மற்றும் உள்துறை இலாகா வழங்கபட உள்ளது. லாலு பிரசாத்தின் மற்றொரு மகன் தேஜ் பிரதாப்புக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படுமாம்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா-ஆளுநரிடம் புதிய ஆட்சிக்கான எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் தந்தார்!