பீகார் பாஜக- ஜேடியூ குடுமிபிடி சண்டை! இப்படியே பேசிகிட்டே இருந்தா எப்படி... ஒரு முடிவுக்கு வாங்க!
பாட்னா: பீகாரில் ஆளும் கூட்டணி கட்சிகளான ஜேடியூ-பாஜக இடையேயான அக்கப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரு கட்சிகளிடையேயான மோதலில் பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் பதவிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பீகார் சட்டசபையில் பாஜகவுக்கு 74 எம்.எல்.ஏக்களும் ஜேடியூ (ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு)வுக்கு 45 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். இருந்தபோதும் ஜேடியூவின் நிதிஷ்குமார் முதல்வராக இருந்து வருகிறார்.
காக்கிச்சட்டை போட ஆசையா?... தமிழக இளைஞர்களே தயாராகுங்கள் - விரைவில் வெளியாகும் அறிவிப்பு
பாஜக- ஜேடியூ விமர்சனங்கள்
பாஜக- ஜேடியூ இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பீகாரில் ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜகவினர் ஆட்சியில் இணைந்திருந்தபோதும் முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சிக்காமல் இருப்பது இல்லை. நிதிஷ்குமாரின் சொந்த தொகுதியில் கள்ள சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மிக கடுமையாக விமர்சித்தது பாஜக.
உ.பி.யில் தனித்து போட்டி
இந்நிலையில் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் இரு கட்சிகளிடையே விரிசலை அதிகமாக்கி உள்ளது. உ.பி. தேர்தலில் போட்டியிட ஜேடியூ விரும்பியது. ஆனால் ஏற்கனவே சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டோம்; அதனால் ஜேடியூவை கூட்டணியில் சேர்க்க முடியாது என பாஜக கை விரித்தது. இதில் ஜேடியூ தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அதேவேகத்தில் உ.பி சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் எனவும் ஜேடியூ அறிவித்தது.
ஜேடியூ சின்ன கட்சி
இதனைத் தொடர்ந்து பீகார் அரசியலில் புயலடித்துக் கொண்டிருக்கிறது. ஜேடியூ, பாஜக தலைவர்கள் பரஸ்பரம் சமூக வலைதளங்களில் யுத்தம் நடத்தி வருகின்றனர். பாஜகவின் ஓபிசி பிரிவு பொதுச்செயலாளர் நிகில் ஆனந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பெரிய கட்சிகள் எப்படி செயல்படுகின்றன என்பதை சிறு கட்சிகளால் புரிந்து கொள்ள முடியாது. தாங்கள் சின்ன கட்சியா? பெரிய கட்சியா? என்பதை அவர்கள்தான் கண்டறிந்து முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு நிகில் ஆனந்த் பதிவிட்டிருந்தார்.
மல்லாந்து எச்சில் துப்பாதீங்க
இதற்கு ஜேடியூவின் இளம் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் ஜா பதிலடி கொடுத்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பதிவில், தங்கள் இருக்கும் தகுதிக்கேற்ப பதிவுகளைப் போட வேண்டும். மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தை நோக்கி எச்சில் துப்பினால் அது உங்கள் மீது விழும். தயவு செய்து அதை துடையுங்க.. உங்களை கடவுள் ஆசீர்வாதம் செய்வாராக என பதிவிட்டுள்ளார். இப்படி இரு கட்சிகளின் தலைவர்களும் வார்த்தைகளால் அடித்துக் கொண்டிருப்பதால் நிதிஷ்குமாரின் முதல்வர் பதவிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.