பீகார் காப்பக சிறுமிகள் பலாத்கார வழக்கில் திருப்பம்.. சிபிஐ விசாரணையை எதிர்நோக்கும் நிதிஷ் குமார்
பாட்னா: காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு எதிராக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு பீகாரின் முஷாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியோடு நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையை உலுக்கியது.
இந்தநிலையில், பலருக்கும் வழக்கில் தொடர்பு இருந்ததால், இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில்தான் இப்போது நிதிஷ் குமாரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சிறுமி கொலை
வழக்கு விவரம்: முசாபர்பூரில் அரசு உதவியுடன் நடத்தப்பட்டு வந்த காப்பகத்தில் 40 க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி படித்து வந்தனர். காப்பகத்தில் 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது, மேலும், ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் அடித்து, கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
தொண்டு நிறுவனம்
காப்பகத்தில் மும்பையை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்த போதுதான், இந்த சம்பவம் வெளி உலகிற்கு தெரியவந்தது. இவ்விவகாரம் தொடர்பாக தீவிரமாக விசாரணையை நடத்திய போலீசார், கடந்ததாண்டு மே மாதம் காப்பகத்தின் பாதுகாப்பு அதிகாரி, கண்காணிப்பாளர், பணியாளர்கள் என குற்றவாளிகள் 11 பேரில் மொத்தம் 10 பேரை கைது செய்தனர்.
சிறுமிகளுக்கு போதை ஊசி
இந்த வழக்கில், முதலில் அஸ்வானி குமார் உட்பட மூன்று பேருக்கு எதிராக விசாரணை நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மருத்துவர் போர்வையில், காப்பகத்திற்கு செல்லும் அஸ்வானி குமார், சிறுமிகளுக்கு மயக்கம் தரும் போதை ஊசி செலுத்தி வந்துள்ளார். அதன்பிறகுதான் பலாத்காரங்கள் நடந்துள்ளன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்தே பலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்ப்பு இருப்பது தெரியவந்தது.
சிபிஐ விசாரணை
முதல்வர் நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருங்கியவரும், அமைச்சர் மஞ்சு வெர்மா கணவருமான ப்ராஜெஷ் தாகூர் இந்த காப்பகத்தை நடத்தி வந்துள்ளார். அவரை பாதுகாக்க அரசு முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டு எழுந்தது. அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்ப்படவே, அமைச்சர் மஞ்சு வெர்மா பதவி விலகினார். மேலும், சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.
முதல்வர் மீது வழக்கு
இந்தநிலையில், அஸ்வானி குமார் வழக்கை விசாரித்து வரும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்த விவகாரத்தில் முதல்வர் நிதீஷ் குமாருடன் சேர்ந்து, முசாபர்பூர் மாவட்ட நீதிமன்ற முன்னாள் நீதிபதி தர்மேந்திர சிங் மற்றும் சமூக நல அலுவலர் அதல் பிரசாத் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணைக செய்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும். தற்போது சிபிஐ விசாரணை உண்மைகளை வெளிக்கொணர்வதாக இல்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவை பரிசீலிக்குமாறு, பாட்னா சிபிஐ எஸ்.பிக்கு உத்தரவிட்டுள்ளது.அவர் இந்த விஷயத்தில் அடுத்த நடவடிக்கை எடுப்பார். சிபிஐ விசாரணை வரம்பின்கீழ் நிதிஷ்குமார் வருவதால் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்துள்ளன.