பீகார் அமைச்சரவையில் மாற்றமா? கல்வித்துறை அமைச்சர் மீது ஊழல் புகார்.. நிதிஷ் குமார் தீவிர ஆலோசனை
பாட்னா: பீகாரில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில் அங்கு கல்வித்துறை அமைச்சர் மேவ்லால் சவுத்திரி மீது ஊழல் புகார் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அங்கு ஆட்சி அமைத்துள்ளது. பீகாரின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ் குமார் மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.
பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைத்து உள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி வெறும் 110 இடங்களில் வென்று உள்ளது. இந்த நிலையில்தான் பீகார் கல்வித்துறை அமைச்சர் மேவ்லால் சவுத்திரி மீது ஊழல் புகார் வைக்கப்பட்டுள்ளது.
"நான் நலம்".. 5 நிமிடம் மட்டும் வழக்கறிஞரிடம் பேசிய சித்திக் கப்பான்..49 நாளாக சிறையில் வாடும் அவலம்
ஊழல்
2017ல் பீகாரில் உள்ள பாகல்பூர் சாபர் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த போது மேவ்லால் சவுத்திரி ஊழல் செய்ததாக புகார். 161 துணை பேராசிரியர்களின் நியமனத்தில் மேவ்லால் சவுத்திரி நிதி மோசடி செய்துவிட்டதாக புகார் வைக்கப்பட்டள்ளது. இது தொடர்பாக எப்ஐஆரும் பதியப்பட்டுள்ளது.
ஆளுநர்
அப்போது பீகாரின் ஆளுநராக இருந்த இப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தான் இந்த விசாரணைக்கு ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் இந்த மேவ்லால் சவுத்திரியை தற்போது நிதிஷ் குமார் தனது அமைச்சரவையில் தேர்வு செய்துள்ளார். அதோடு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பும் வழங்கி உள்ளார். இதுதான் பீகாரில் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
கடுமையாக விமர்சனம்
நிதிஷ் குமாரின் இந்த தேர்வை ராஷ்டிரிய ஜனதா கட்சி கடமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆர்ஜேடி கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் இதுகுறித்த கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 10 லட்சம் வேலைகளை தருவேன் என்று ஆர்ஜேடி கூறியது, ஆனால் நிதிஷ் குமாரோ வேலை வாய்ப்பில் ஊழல் செய்த நபருக்கு கல்வித்துறை அமைச்சர் பதவியை கொடுத்துள்ளார் என்று விமர்சனம் வைத்துள்ளார்.
என்ன நடக்கும்
இந்த நிலையில் மேவ்லால் சவுத்திரியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. மேவ்லால் சவுத்திரியை முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை செய்தார். நீண்ட நேரம் இந்த ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை காரணமாக மேவ்லால் சவுத்திரியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுகிறதோ என்று கேள்வி எழுந்துள்ளது.