'கடவுள்' மோடி.. பிரதமர் சிலையை கோயிலுக்குள் வைத்து சாமியாக வழிபடும் கிராமம்
மோடியை கடவுளாக கட்டிஹார் கிராம மக்கள் வழிபடுகின்றனர்.
பாட்னா: ஆதரவோ எதிர்ப்போ... அது எதுவாக இருந்தாலும் சரி... அரசியல் அசுர வளர்ச்சியில் மோடியை ஒதுக்கி விட முடியாது. டீ கடையில் வேலை பார்த்த சாதாரண சிறுவன் இன்று பிரதமர் ஆகிவிட்டதை கண்டு நாடே வியந்தது.
நம்மை ஆண்ட பல பிரதமர்களுக்கு நாம் பல பட்டப் பெயர்களை சொல்லி அன்பாக அழைத்திருக்கிறோம். ஆனால் மோடி இதிலும் சற்று வித்தியாசப்பட்டே நிற்கிறார். அதாவது எந்த அளவுக்கு என்றால், மனிதரில் இருந்து கடவுள் ஸ்தானத்துக்கே உயர்ந்துவிட்டார். ஆம்... மோடியை கடவுளாக வணங்குகிறார்களாம் ஒரு கிராம மக்கள்.
[பால் குடுக்கல.. முகத்தை கூட பாக்கல.. பாத்திரத்தில் மூடி குழந்தையை கொன்றோம்.. இளந்தாய் பகீர்]
காந்திக்கு கோயில்
லட்சக்கணக்கான சிலைகள் மகாத்மா காந்திக்கு இருந்தாலும், ஒரே ஒரு கோயில்கூட இதுவரை நாட்டில் இல்லை. அதனால் மகாத்மா காந்திக்கு விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோயில் கட்டினார். அதேபோல நம் ஈரோடு மாவட்டம் செந்தாம்பாளையம் கிராமத்தில் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு கோயில் கட்டி உள்ளனர். இந்த கோயிலில் மகாத்மா காந்தி மற்றும் அவரது மனைவி கஸ்தூரிபாய் ஆகியோர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
தேங்கிய குளம், குட்டைகள்
இந்நிலையில் பீஹார் மாநிலம் பாட்னாவில் கட்டிஹார் என்ற கிராமத்தில்தான் மோடியை வழிபடுகிறார்கள் மக்கள். அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும் வளர்ச்சி இல்லாத கிராமம்தான் இந்த கட்டிஹார். சரியான ரோடு கிடையாது, கழிப்பிட வசதி கிடையாது, மழை பெய்தால் சொல்லவே தேவையில்லை. எங்க பார்த்தாலும் தேங்கிய குளம், குட்டைகள் என்றே இருக்கும்.
மின்சார வசதி
ஆனாலும் இதையெல்லாம் அந்த கிராம மக்கள் ஒரு பிரச்சனையாகவே எடுத்து கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணம், கரண்ட்டே இல்லாத இந்த கிராமத்துக்கு இப்போது கரண்ட் இருக்கிறதாம். எப்போதுமே மின்சார வசதியை ஏற்படுத்தியது மோடி அரசு என்பதால் அவரை வெறும் பிரதமராக பார்க்க மனசில்லையாம் இந்த கிராம மக்களுக்கு.
குர்தா, கண்ணாடி
அதனால் கடவுளாகவே அதாவது வளர்ச்சியின் கடவுளாகவே பார்க்கப்படுகிறார். அதனால்தான் அவரை வழிபடுகின்றனர் கட்டிஹார் கிராம மக்கள். இங்குள்ள ஹனுமர் கோயிலுக்குள் மோடியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மோடி அணியும் குர்தா, கண்ணாடி என்று அந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மோடி போல இல்லை
இந்த மோடி சிலைக்குதான் வழிபாடு நடக்கிறது. இப்படி வழிபாடு தொடர்ந்து நடத்தினால் வளர்ச்சி கடவுள் மோடி தங்களுக்கு இன்னும் நிறைய வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்துவார் என்றும் கிராம மக்கள் நம்புகின்றனர். மோடியின் கடவுள் சிலைதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் இந்த சிலை பார்ப்பதற்கு கொஞ்சம்கூட மோடி போல இல்லை என்றும் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.