பீகாரில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு.. பாஜக-ஜேடியூ கூட்டணியில் சலசலப்பு
பாட்னா: பீகாரில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக நிதிஷ்குமாரை முன்னிறுத்துவதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பீகாரில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடியூ, தனித்து போட்டியிட்டது. அத்துடன் மத்திய அரசின் என்.ஆர்.சிக்கும் நிதிஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதனால் பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் பீகார் பாஜக-ஜேடியூ கூட்டணியை பாதிக்காது என ஒரு பக்கம் இருகட்சித் தலைவர்களும் கூறி வருகின்றனர்.
தற்போது திடீரென நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ராமேஸ்வர் செளரசியா கூறுகையில், மீண்டும் மீண்டும் ஒருவரையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதை பீகார் மக்கள் விரும்பவில்லை. பீகாருக்கு புதிய முதல்வர் வேட்பாளர் தேவை என கூறியுள்ளார்.
இதற்கு ஜேடியூ பொதுச்செயலாளர் கே.சி. தியாகி அளித்துள்ள பதிலில், பீகாரில் முதல்வர் வேட்பாளரை மாற்ற வேண்டிய தேவை இல்லை. வாஜ்பாய், நிதிஷ்குமார், மோடி என ஆளுமைகளை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர்தான் முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.
மேலும் ஜேடியூவின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், ஜார்க்கண்ட்டில் பாஜகவின் தோல்விக்கு காரணமே ஜேடியூவுடன் கூட்டணி அமைக்காமல் போனதுதான் காரணம் என விமர்சித்திருக்கிறார்.