பீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு 21; ஜேடியூவுக்கு 12 இடங்கள்?
பாட்னா: பீகார் முதல்வராக 4-வது முறையாக பதவியேற்கும் நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு 21 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி 125 இடங்களைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி நிதிஷ்குமாரையே மீண்டும் முதல்வராக பாஜக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர்.
பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் ஆளுநர் பாகு சவுகானை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்.
பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா உறுதி.. பாட்னா எய்ம்ஸ் இல் அனுமதி
இன்று பதவியேற்பு
பாட்னாவில் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4.30 மணிக்கு முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்கிறார். பீகாரில் 4-வது முறையாக முதல்வராகிறார் நிதிஷ்குமார். ஏற்கனவே 15 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியவர் நிதிஷ்குமார்.
அமைச்சர்களாக 36 பேர்
இதனிடையே தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றதால் நிதிஷ்குமார் அமைச்சரவையிலும் கூடுதல் இடங்கள் அந்த கட்சிக்கு கொடுக்கப்படுகிறது. நிதிஷ்குமார் அமைச்சரவையில் மொத்தம் 36 பேர் இடம்பெறுவர். அம்மாநில சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 243. இதில் 15% பேர் அமைச்ச்சர்களாக முடியும்.
பாஜகவுக்கு 60% இடம்
நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜக 60% இடங்களைப் பெற உள்ளது. அதாவது மொத்தம் 20 முதல் 21 பேர் பாஜகவின் அமைச்சர்களாக இருப்பார்கள். 11 முதல் 12 பேர் வரை ஜேடியூவை சேர்ந்தவர்கள். கூட்டணி கட்சிகளான விஐபி, ஹெச்ஏஎம் ஆகியவற்றுக்கு தலா 1 அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாம்.
ஜிதன்ராம் மஞ்சி மகன்
ஹெச்ஏஎம் தலைவரான முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி மகன் சந்தோஷ் சுமன் அமைச்சர் பதவிக்கு முயற்சிக்கிறாராம். சந்தோஷ் சுமன் இப்போது பீகார் சட்ட மேலவை உறுப்பினராக உள்ளார். முதல்வராகும் நிதிஷ்குமாரும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடாமல் எம்.எல்.சியாகவே இருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.