19 லட்சம் வேலைவாய்ப்புகள்... தேஜஸ்வியை கேலி செய்துவிட்டு பாஜக செய்த வேலையை பாருங்க!
பாட்னா: தேஜஸ்வி யாதவ் வழங்கிய ஒரு தேர்தல் வாக்குறுதியை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் கடுமையாக விளாசிய நிலையில், பாஜக அதேபோன்ற வாக்குறுதியை தனது தேர்தல் அறிக்கையில் வழங்கி ஷாக் கொடுத்துள்ளது.
இதன்மூலம் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவுக்கு எதிராக பேசிய அனைத்து கருத்துக்களும் இப்போது நீர்த்துப் போய்விட்டன.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி-காங்கிரஸ் கூட்டணியின் பீகார் முதல்வர் வேட்பாளராக களமிறங்கியுள்ள தேஜஸ்வி யாதவ், பீகாரில் 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தார்.
தேஜஸ்விக்கு இளைஞர்கள் ஆதரவு
இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த வாக்குறுதி. தேஜஸ்வி பிரச்சாரக் கூட்டங்களுக்கு பெருமளவுக்கு இளைஞர்கள் சாரை சாரையாக வருகிறார்கள். இதனால் எரிச்சலடைந்த நிதிஷ்குமார் தேஜஸ்வி யாதவுக்கு அனுபவம் கிடையாது என்பதால் இதுபோன்ற வாக்குறுதியை வழங்குகிறார். 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களுக்கு சம்பளம் எங்கே இருந்து கொடுக்க முடியும்? ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்க முடியுமா அல்லது கள்ள நோட்டு அச்சடித்துக் கொடுக்க முடியுமா என்றெல்லாம் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.
கரி பூசிட்டாங்களே
ஆனால், நிதிஷ்குமார் முகத்தில் கரி பூசுவது போல ஒரு வாக்குறுதியை பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 19 லட்சம் வேலைவாய்ப்புகள் பீகாரில் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே மாதிரி வாக்குறுதி
ஒரு பக்கம் வேலைவாய்ப்புகளை இவ்வாறு உருவாக்குவீர்கள் என்று நிதீஷ் குமார் கேள்வி எழுப்பும்போது, அதேபோன்ற வாக்குறுதியை அதன் கூட்டணி கட்சியான பாஜக வழங்கியுள்ளது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லையா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. அல்லது தேஜஸ்வி யாதவ் பக்கம் இளைஞர்கள் சாய்வதை தடுப்பதற்காக அவசரமாக 19 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
விமர்சனம்
எப்படி இருந்தாலும் எதிர்க்கட்சி வழங்கிய தேர்தல் அறிக்கையை கிண்டல் செய்த நிதிஷ்குமார், இப்பொழுது தனது கூட்டணி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார். இதேபோலத்தான், பீகார் தேர்தலில் பாஜக வென்றால், கொரோனா தடுப்பூசி இலவசமாக கொடுக்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கையும் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.