பீகார் சட்டசபை தேர்தல் 2020: பாஜக தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்பு சிறப்பம்சங்கள் என்னென்ன
பீகார் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால் இலவச கொரோனா தடுப்பூசி, 19 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட 11 முக்கிய அம்சங்களைக் கொண்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது பாரதிய ஜன
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் மாநிலம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் 2022ஆம் ஆண்டுக்குள் 30 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் 19 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்பன உள்ளிட்ட 11 முக்கிய அம்சங்கள் கொண்ட வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது பாஜக.
பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. அக்டோபர் 28ஆம் தேதி மொத்தம் 71 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 2வது கட்டமாக நவம்பர் 3ஆம் தேதியன்று 94 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஜேடியூ-பாஜக கூட்டணியில் பாஜக 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜேடியூ 122 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் 2020: கொரோனா தடுப்பூசி இலவசம் - பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தனியாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் கூட்டணி கட்சியில் உள்ள பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாட்னாவில் இன்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பாஜக தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்:
- மாநிலம் முழுவதும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்
- 30 லட்சம் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்
- 19 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும்
- பீகாரில் மருத்துவம் பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்பிக்கடும்
- பீகாரில் 3 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
என்பன உள்ளிட்ட 11 முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய நிர்மலா சீதாராமன், வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி பாஜக என்று கூறினார். பீகாரின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியின் ஒரு அங்கமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தேசிய ஜனநாயகக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமாருக்கு வாக்காளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.