பீகார் தேர்தல்.. கள நிலவரம் ரொம்ப வித்தியாசமா இருக்குது.. ரிசல்டுக்கு பிறகு பெரிய டிவிஸ்டுகள் வரும்
பாட்னா: பீகார் அரசியல் நிலைமை சற்றே வித்தியாசமாக இருக்கிறது. 15 வருடங்களாக முதல்வராக இருக்கும் நிதீஷ் குமாருக்கு எதிராக மக்களிடையே அதிருப்தி அலை இருக்கிறது. ஆனால் அதே கூட்டணியில், பின்னர் அங்கம் வகித்து, ஆட்சியிலும் பங்கு வகிக்கும் பாஜக மீது பெரும்பாலும் அங்கு அதிருப்தி இல்லை.
பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. நிதிஷ்குமார் முதல்வராக இருந்தார்.
பாஜக பற்றி கண்டுகொள்ளவில்லை
பிறகு பாஜகவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சியில் தொடர்கிறார். தொடர்ந்து முதல்வராக இருக்கக் கூடியவர் என்பதால் இயல்பாகவே அவர் மீது மாநிலம் முழுக்க எதிர்ப்பு அலை நிலவுகிறது. ஆனால் பாஜகவை சேர்ந்த துணை முதல்வர் சுசில் மோடி பற்றி பெரும்பாலும் அதிருப்தி குரல்கள் எழ வில்லை என்பதுதான் பிகார் கள நிலவரம்.
நிதிஷ்குமாருக்கு எதிராக அலை
நிதீஷ் குமார் மற்றும் அவரது கட்சி மீது அதிருப்தி இருக்கிறதே தவிர, பாஜக அவருடன் கூட்டணியில் இருக்கிறது என்பதையே மக்கள் மறந்து விட்டது போல தெரிகிறது. பீகார் மாநிலத்தில் உயர் ஜாதியினர் என்று அழைக்கப்படக்கூடிய வாக்குகள் சுமார் 15 சதவீதம் இருக்கிறது. இவர்கள் நரேந்திரமோடியின் தீவிரமான விசுவாசிகளாக அறியப்படுகிறார்கள். அதேநேரம் நிதிஷ்குமார் தோல்வியடைய வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.
உயர் ஜாதி பிரிவு ஓட்டுக்கள்
இதே மனநிலையை தான் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராஜ் பாஸ்வான் முன்னெடுக்கிறார். பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யாத அவர், நிதிஷ்குமாரை மட்டும் தாக்குகிறார். தேர்தல் நேரத்தில் திடீரென அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். சிராக் பாஸ்வான் தனது கட்சியில், உயர்சாதியினர் என்று அழைக்கப்படக்கூடிய பிரிவை சேர்ந்த பலருக்கும் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார். இதன்மூலம் நிதிஷ்குமாருக்கு செல்லவேண்டிய உயர் வகுப்பினரின் வாக்குகளை கணிசமாக பிடித்து விடுவார். இதுதவிர தலித் வாக்குகளும் இவருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த ஜாதி, யாருக்கு சப்போர்ட்?
ஜாதிவாரியாக மனநிலையை அலசிப் பார்த்தால் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் மஹதலித்ஸ் பிரிவினர் இதுவரை நிதிஷ்குமாருக்கு ஆதரவாக இருந்த நிலையை மாற்றிக்கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சி அணியினருக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். உதாரணத்துக்கு, முசாபர்நகர் பகுதி எடுத்துக்கொண்டால் மல்லாஸ், ஜாதியினர் பெரும்பாலும் இந்துத்துவா கொள்கை கொண்டவர்கள். ஆனால், நிதிஷ் குமாரை மீண்டும் பதவிக்கு வர விடக்கூடாது என்பதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு வாக்களிக்க பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மல்லாஸ் ஜாதி பிரிவினரை ஈர்க்கும் சக்தியாக தி விகாஸ்சீல் இன்சார் கட்சி உருவெடுத்துள்ளது. கடைசி நேரத்தில் பாஜக-நிதிஷ்குமார் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தது இந்த கட்சி. அடிமட்டத்தில் தொண்டர்கள் பலம், கட்சி நிர்வாக பலம் இதற்கு கிடையாது என்ற போதிலும், நிதீஷ் குமாரை வெளியேறுவதற்காக இந்த கட்சிக்கும் வாக்களிப்பதற்கு மல்லாஸ் ஜாதியினர் தயாராக இருக்கிறார்கள்.
தலித் ஓட்டுக்கள்
தலித் ஜாதி பிரிவினை சேர்ந்தவர்கள், லாலுபிரசாத் யாதவ் மீது மரியாதை வைத்துள்ளார்கள். அவர் மகனும் எதிர்க்கட்சி கூட்டணி முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவை பற்றி கூட அவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் லாலு பிரசாத் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களை பொறுத்த அளவில், லாந்தர் அதாவது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சின்னம் மட்டுமே முக்கியமானது. ஐக்கிய ஜனதா தளத்தின் அம்பு, சின்னம் அவர்களை ஈர்க்கவில்லை.
பாஜக திட்டம் என்ன
மக்களின் மனநிலையை அப்படியே பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான் புரிந்து வைத்திருப்பதால்தான் என்னவோ, நிதிஷ் குமாருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறாரே தவிர பாஜகவுக்கு எதிராக அவர் செய்யவில்லை. ஒருவேளை இந்த பலமுனை தாக்குதல்களாலும், நிதிஷ்குமார் மீதான எதிர்ப்பு அலைகளாலும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி குறைவான சீட்டுகளை வென்று.. பாஜக அதிக சீட்டுகளை வென்றால், அப்போது முதல்வர் பதவியில் நாங்கள் தான் இருப்போம் என்று பாஜக கோரிக்கை வைக்க முயலக்கூடும். அதற்கு நிதிஷ்குமார் கட்சி ஒத்துக்கொள்ளவில்லை என்றால் சிராக் பாஸ்வான் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறது அங்குள்ள நிலவரங்கள்.
பல மாற்றங்கள்
சிராக் பாஸ்வான் கட்சி அந்த அளவுக்கு பெரும்பான்மை பெறுமா என்பதுதான், இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, என்னதான், நாங்கள் அதிகமாக சீட்டுகளை வென்றாலும் கூட, நிதீஷ்குமார் தான் முதல்வர் என்று அறிவித்துள்ளபோதிலும், மகாராஷ்டிராவில் சிவசேனா- பாஜக கூட்டணி முதல்வர் பதவி சண்டையில்தான் உடைந்து போனது என்பதை மறக்க முடியாது. இங்கும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் கட்சியின் தயவை நாடவும் தயங்க மாட்டார் என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.
பாஜகவுக்கு லாபம்
ஆகமொத்தம் எப்படி பார்த்தாலும் பாஜகவுக்கு எதிராக பீஹாரில் பெரிய எதிர்ப்பு அலையில்லை. யார் அடித்துக் கொண்டாலும் பிடித்துக்கொண்டாலும், பாஜக அங்கு பாதுகாப்பாக இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 24 சதவீதம் வாக்குகளை பெற்றது பாஜக. இந்த முறை அதை விட அதிகமாக வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள் பீகார் அரசியல் நிபுணர்கள்.