பரபரப்பு.. ராம்விலாஸ் பாஸ்வான் எப்படி இறந்தார்.. விசாரிக்ககோரும் மஞ்சி.. சிராக் பாஸ்வான் கொந்தளிப்பு
ராம் விலாஸ் பாஸ்வான் எப்படி இறந்தார் என்று விசாரணை கோருகிறது தேசிய ஜனநாயக கூட்டணி
பாட்னா: முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வரும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருவருமான ஜித்தன் ராம் மஞ்சி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதால் பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த ராம் விலாஸ் பாஸ்வான் அக்டோபர் 8ம் தேதி மரணமடைந்தார்.. அவரது லோக் ஜன சக்தி கட்சி தற்போது பீகார் சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. மகன் சிராக் பாஸ்வான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மறுபக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.. சிராக்குடன் பாஜக ரகசிய உறவு வைத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. நிதீஷ் குமாரை காலி செய்யவே சிராக்கை தனித்து போட்டியிட வைத்துள்ளது பாஜக என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
ஜித்தன் ராம் மஞ்சி
இந்த நிலையில், சிராக் பாஸ்வானை குறி வைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களில் ஒருவரான ஜித்தன் ராம் மஞ்சி இறங்கியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு மஞ்சி எழுதியுள்ள கடிதத்தில், பாஸ்வான் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். சிராக் பாஸ்வானின் நடத்தை மீது சந்தேகம் உள்ளது. ராம் விலாஸ் பாஸ்வான் போட்டோ முன்பு அவர் ஒத்திகை பார்ப்பது போல வெளியான வீடியோ பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
போட்டோ ஷூட்
நாடே பாஸ்வான் மரணம் தொடர்பாக துக்கத்தில் இருந்தபோது அப்பாவின் போட்டோவுக்கு முன்பு ரிகர்சல் பார்த்துள்ளார் சிராக் பாஸ்வான்... எனவே இது விசாரிக்கப்பட வேண்டும்.. யாருடைய உத்தரவின் பேரில் பாஸ்வான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்? யார் மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டது? யாருடைய உத்தரவின் பேரில் ராம் விலாஸ் பாஸ்வானை 3 பேர் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர்? என்பது தெளிவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் மஞ்சி.
விளக்கம்
தற்போது இது குறித்து கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளார் சிராக் பாஸ்வான்.. அவர் சொல்லும்போது, எனது அப்பா ஆஸ்பத்திரியில் இருந்தபோது ஏன் மஞ்சி அவரைப் பார்க்க வரவில்லை. ஏன் அக்கறை காட்டவில்லை. இப்போது இறந்த பிறகு சிறுபிள்ளைத்தனமாக பேசுவது ஏன். யாருமே அவர் உயிருடன் இருந்தபோது வந்து பார்க்கவில்லையே.. இப்போது ஏன் அக்கறை காட்டுகிறார்கள்.
பரபரப்பு
என்னுடைய அப்பா சீரியஸாக உள்ளது குறித்து மஞ்சியிடம் நான் போனில் சொன்னேன்.. அப்போதும் கூட அவர் வந்து பார்க்கவில்லை.. இப்போது இப்படி பேசுகிறார்... அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றார் சிராக் பாஸ்வான்... நாளை பீகாரில் அடுத்த கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது பெரும் பரபரப்பை அங்கு ஏற்டுத்தி வருகிறது.