இதுதான் இந்தியா.. இறந்துபோன இந்து ஊழியரை தோளில் சுமந்த இஸ்லாமிய குடும்பம்.. நெகிழ்ச்சி சம்பவம்
பாட்னா: பீகாரில் தனது கடையில் 25 ஆண்டுகளாக வேலை செய்த 75 வயது நிரம்பிய முதியவர் இறந்த நிலையில் அவரது உடலை தோளில் சுமந்து முஸ்லிம் குடும்பத்தினர் இந்து முறைப்படி இறுதி சடங்கு நடத்தி தகனம் செய்தனர்.
இந்தியாவில் சமீப காலமாக வகுப்புவாத மோதல், வன்முறைகள் நடந்து வருகின்றன. மேலும் மதம்சார்ந்த வெறுப்புணர்வை சிலர் தூண்டுகின்றனர்.
இதனால் சமீபத்தில் டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட், ராஜஸ்தான் உள்பட பல்வேறு இடங்களில் வன்முறைகள் நடந்துள்ளன.
வயது முதிர்வால் இறந்த முதியவர்
இந்நிலையில் தான் பீகாரில் மதநல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு: பீகார் தலைநகர் பாட்னாவில் வசித்து வருபவர் முகமது ரிஸ்வான். இவரது கடையில் ராம்தேவ் ஷா என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இதனால் ராம்தேவ் ஷா, முகமது ரிஸ்வான் இடையே குடும்ப உறுப்பினர் போன்ற உறவு இருந்தது. ராம்தேவ் ஷா 75 வயது நிரம்பினாலும் கூட தொடர்ந்து கடையில் வேலை செய்து வந்தார்.இந்நிலையில் அவர் வயது முதிர்வால் கடந்த வாரம் இறந்தார்.
தோளில் சுமந்த முகமது ரிஸ்வான்
இதையடுத்து அவரது உடலை இந்து முறைப்படி தகனம் செய்ய முகமது ரிஸ்வான் முடிவு செய்தார். இதையடுத்து இந்து முறைப்படி இறுதி சடங்குகள் செய்து ராம்தேவ் ஷாவின் உடலை முகமது ரிஸ்வான் தோளில் சுமந்து சென்று தகனம் செய்தார். இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அப்பா மாதிரி
இதுபற்றி முகமது ரிஸ்வான் கூறுகையில், ‛‛ராம்தேவ் ஷா எனது அப்பா மாதிரி. வேலை தேடி என் கடைக்கு அவர் வந்தபோது 50 வயசு இருக்கும். அதிக எடையை தூக்க முடியாது என கூறினேன். அதற்கு அவர் கணக்கு பார்க்க முடியும் என்று பணிக்கு சேர்ந்தார். வயது அதிகம் ஆனதால் ஓய்வெடுக்கும்படியும், சம்பளம் தருவதாகவும் கூறினேன். ஆனால் அவர்கேட்காமல் தொடர்ந்து கடையில் வேலை செய்தார்'' என்றார்.
மதத்தை யாரும் பார்ப்பது இல்லை
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வகுப்புவாத மோதல், கலவரங்கள், வன்முறைகள் நடந்து வருகிறது. சமீபத்திய வகுப்புவாத மோதல்கள் குறித்து கேட்டதற்கு, ‛‛தொலைக்காட்சியில் காட்டப்படும் அனைத்தும் சரியானது இல்லை. ஒரு குழந்தைக்கு காயம் ஏற்பட்டால் ஒவ்வொருவரும் உதவி தான் செய்வோமே தவிர அவரது மதத்தை கேட்க மாட்டோம்.இந்துக்கள் எங்கள் விழாக்களில் கலந்து கொள்வார்கள், நாங்கள் அவர்களின் விழாக்களில் கலந்து கொள்கிறோம்'' என்றார்.