முத்தலாக் தடை மசோதவை எதிர்ப்பது உறுதி.. கூட்டணி கட்சியின் அறிவிப்பால் அதிர்ச்சியில் பாஜக
பாட்னா: மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள முத்தலாக் தடை மசோதாவை எதிர்ப்போம் என, பாஜக கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளம் கூறியுள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் இந்த அறிவிப்பு பாஜகவுடனான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
முத்தலாக்கிற்கு சட்டப்பூர்வமாக தடை விதிக்கும் வகையில், கடந்த முறை நடைபெற்ற மோடி ஆட்சியில் மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால், மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறவில்லை. மசோதாவில் திருத்தம் செய்தும் மோடி அரசால் நிறைவேற்ற இயலவில்லை.
எனவே அவசர சட்டங்கள் மூலம் முத்தலாக் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்தியது மோடிஅரசு. தற்போது 17-வது மக்களவை அமைந்துள்ள நிலையில் 16-வது மக்களவையில் கொண்டு வரப்பட்டு, மாநிலகளவையில் நிறைவேறாமல் நிலுவையில் உள்ள முத்தலாக் மசோதா தானாக காலாவதியாகியது.
டெல்லி அரசின் அறிவிப்பு .. 'ஆபத்தான முன்னுதாரணம்'.. பிரதமர் மோடிக்கு மெட்ரோமேன் ஸ்ரீதரன் கடிதம்
இதனால் மீண்டும் புதிதாக முத்தலாக் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி, அதன் பிறகு மாநிலங்களவையிலும் நிறைவேற்ற வேண்டியது அவசியமாகி உள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் நிதிஷ் கட்சி 17 இடங்களை கைப்பற்றியது. எனினும் மத்திய அமைச்சரவை பட்டியலில், ஐக்கிய ஜனா தளம் இடம்பெறவில்லை. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
முத்தலாக் தடை மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற பாஜக தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முத்தலாக் தடை சட்டப்படி, முத்தலாக் கூறும் கணவருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும். முத்தலாக் கூறி விவகாரத்து செய்வது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம். எனினும் விசாரணை துவங்கும் முன் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆண், மாஜிஸ்திரேட்டை அணுகி ஜாமின் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் முத்தலாக் தடை மசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்க போவதாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சி அறிவித்துள்ளது.
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநில அமைச்சருமான ஷ்யாம் ரசாக் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே முத்தலாக் தடை மசோதாவை எதிர்த்து வருகிறோம். மீண்டும் முத்தலாக் தடை சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், மாநிலங்களவையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க போவதாக கூறியுள்ளார்.
எப்படியாவது இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதவை நிறைவேற்றியே தீருவது என்ற முடிவில் உள்ள பாஜக தலைமைக்கு, ஐக்கிய ஜனதா தள கட்சியின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.