கடவுள் ராமராக ராகுல் சித்தரிப்பு... போஸ்டரால் பரபரப்பு
பாட்னா: பீகார் மாநிலம், பாட்னாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுலை, கடவுள் ராமராக சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், பரபரப்பு ஏற்பட்டது.
விரைவில் மக்களவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வித்தியாசமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
இதற்கு முன் ராகுலை, 'தீவிர சிவ பக்தர்' என, கூறி வந்த, காங்கிரஸ் கட்சியினர், தற்போது, ராமராக சித்தரித்துள்ளனர்.
தேர்தல் பிரச்சாரம்
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு மாநிலங்களில் நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகிறார். மேலும், கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளையும் தெரிவித்து வருகிறார்.
|
ராமராக ராகுல்
இந்நிலையில், பிகார் மாநிலம் பாட்னாவில் 'ஜன அகன்ஷா'பேரணி நடைபெறவுள்ளது. இதில், சோனிய காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி, நகர் எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளளன. அதில், காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர், ராகுல் காந்தியை ராமராக சித்தரித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டர் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவ பக்தர்
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநில தேர்தல்களுக்கு முன்பு ராகுல் காந்தியை சிவ பக்தராக காங்கிரஸ் கட்சி சித்தரித்து காட்டியிருந்தது. இது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது.
பாஜக பாய்ச்சல்
இதற்கு முன்பு ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் கலந்துகொண்டார். வாக்கு அரசியலுக்காகவே இது போன்ற செயல்களில் ராகுல்காந்தி ஈடுபடுகிறார் என பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.