யாரை மீட்பது? பரிதவிக்கும் மாணவர்களையா? பல லட்சம் தொழிலாளர்களையா? சர்ச்சையான நிதிஷ்குமாரின் வியூகம்
பாட்னா: கொரோனா லாக்டவுன் இந்திய அரசியல் வரலாற்றிலும் விசித்திரங்களையும் விளையாட்டுகளையும் அரங்கேற்றி வருகிறது. இதன்பிடியில் சிக்கியிருப்பதுதான் பீகார் அரசியல்.
கொரோனா லாக்டவுன் என்பது பல மாநிலங்களுக்கு பல்வேறு வகைகளில் பெரும் நெருக்கடிகளை கொடுத்திருக்கிறது. குறிப்பாக பிற மாநிலங்களில் சிக்கியிருக்கும் தங்களது மாநிலத்தவரை மீட்பதில்தான் பெரும் சிக்கலை மாநிலங்கள் எதிர்கொள்கின்றன.
லாக்டவுன் தொடக்கத்தில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களை தொடர்பு கொண்டு தங்களது மாநில தொழிலாளர்களை பாதுக்காக்க முதல்வர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று அந்தந்த மாநில முதல்வர்களும் உதவி செய்தனர்.
நடை பயணம்
லாக்டவுன் மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில் பிற மாநிலங்களில் தவித்த கூலித் தொழிலாளர்கள் வெறுப்படைந்து போயினர். இதனால் எப்படியாவது சொந்த ஊருக்கு சென்றுவிடுவதில் முனைப்புடன் நடக்கவும் தொடங்கினர். அப்படி பாதி வழியில் வந்து சிக்கியவர்களும் மரணித்தவர்களும் உண்டு.
மாநிலங்களின் மீட்பு நடவடிக்கைகள்
இந்நிலையில் ராஜஸ்தானின் கோட்டா உள்ளிட்ட சில மாநிலங்களில் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்டோரை மீட்பதி வட இந்திய மாநிலங்கள் முனைப்பு காட்டின. சிறப்பு பேருந்துகள் மூலம் இந்த மாணவர்களை மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மீட்டிருக்கின்றன.
பீகார் மீது விமர்சனம்
இதனால் பீகார் மாநில அரசு கடுமையான விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது. பீகாரில் ஒருதரப்பினர் ராஜஸ்தானின் கோட்டாவில் தவிக்கும் மாணவர்களை ஏன் மீட்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறது. இன்னொரு பக்கம், பிற மாநிலங்களில் தவிக்கும் பீகாரின் 25 லட்சம் கூலித் தொழிலாளர்களை எப்போது மீட்டு வருவீர்கள்? என்கிற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இது பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடும் நெருக்கடியை தந்துள்ளது.
நிதிஷின் தேர்தல் கணக்கு
நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் ராஜஸ்தானின் கோட்டாவில் படித்து வரும் மாணவர்கள் நல்ல பொருளாதார பின்புலம் கொண்டவர்கள்; அவர்களை விட பிற மாநிலங்களில் தவிக்கும் தொழிலாளர்களை மீட்பதில் முன்னுரிமை காட்ட நினைக்கிறார். ஆனால் இது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்திருக்கிறார். இத்தனை லட்சம் கூலித் தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு முயன்றாலே ஏழைகளின் பாதுகாவலன் என்கிற மிகப் பெரிய இமேஜ் கிடைக்கும். இது தேர்தல் களத்தில் கை கொடுக்கும் என்பது நிதிஷ்குமாரின் கணக்கு. இதனால் மத்திய அரசு மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார் நிதிஷ். ஆனால் எதிர்க்கட்சிகளோ இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிடாமல் நிதிஷ்குமாருக்கு நெருக்கடி தந்து கொண்டிருக்கின்றன.