மூளை காய்ச்சலால் 43 குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்.. ஆனால் பீகார் அரசு சொல்லும் அதிர்ச்சி காரணம்
பாட்னா: பீகாரில் மூளை காய்ச்சல் காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.ஆனால் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு குழந்தைகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததாலயே இறந்து போய் இருப்பதாக அறிவித்துள்ளது. பீகாரில் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து வரும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் முஷாபர்பூர் மாவட்டத்தில் என்சாபலிட்டிஸ் எனப்படும் மூளை காய்ச்சல் பிரச்னையால், மூளையில் வீக்கம் ஏற்பட்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். இதுவரை கடந்த ஜுன் 1ம் தேதி இருந்து 13ம் தேதிக்குள் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
முஷாபர்பூர் மாவட்டத்தில் உள்ள எஸ்கேஎம்சிஹெச் மருத்துவமனையில் என்சாபலிட்டிஸ் (மூளை காய்ச்சல்) பாதிப்புடன் கடந்த ஜுன் 1ம் தேதி முதல் தற்போது வரை 117 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 12 மாவட்டங்களில் மூளை காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
நிதீஷ்குமார் உத்தரவு
இது தொடர்பாக உரிய சிகிக்சை அளிக்கும்படி பீகார் முதல்வர் நிதீஷ்குமார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் நேரில் சென்று ஆய்வு நடத்த, சுகாதார துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினை அனுப்பி உள்ளது. இந்த குழுவும் ஆய்வு நடத்த உள்ளது.
சுகாதாரத்துறை விளக்கம்
மூளை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக பீகார் மாநில சுகாதாரத்துறை இயக்குனர் ஆர்டி ரஞ்சன் பாதிக்கப்பு அதிகம் உள்ள முஷாபர்பூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். அதன்பின்னர் அவர் கூறுகையில், "பாட்னாவில் இருந்து மருத்துவ குழுவினர் இங்கு வந்துள்ளனர். ஜுன் 10ம் தேதி நிலவரப்படி, 109 பேர் மூளை காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். இதில் 34 குழந்தைகள் உயிரிழந்தனர், இவர்கள் அனைவரும் ரத்ததில் சர்க்கரையின் அளவு குறைந்ததாலேயே உயிரிழந்துள்ளனர். யாரும் காய்ச்சல் பாதிப்பால் இறந்த போகவில்லை" என மறுத்தார்.
காய்ச்சல் முற்றிய பின்
இதனிடைய அங்குள்ள கெஜ்ரிவால் என்ற தனியார் மருத்துவமனை, கடந்த ஜுன் 1 முதல் தற்போது வரை மூளை காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள், காய்ச்சல் பாதிப்பு முற்றிய பின்னரே மருத்துவமனைக்கு அழைத்து வருவதாகவும் அதனால் உயிரிழப்பதாகவும் கூறியுள்ளது.
43 டிகிரி செல்சியஸ் வெயில்
இதனிடையே பீகாரில் 41 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெயில் கொழுத்தி வருவதால் குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என பீகார் மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொசு கடிப்பதால் பரவும் என்சாபலிட்டிஸ் நோய் காரணமாக, கடுமையான காய்ச்சலும், மூளையில் வீக்கமும் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.