எங்க அம்மா எப்ப பிறந்தாங்கன்னு எனக்குகூட தெரியாது.. என்ஆர்சி குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார்!
பாட்னா: எங்க அம்மா எப்போது பிறந்தாங்க என்பது எனக்கே தெரியாது என்று கூறிய பீகார் முதல்வர் நிதீஷ்குமார், என்பிஆர் படிவத்தில் சர்ச்கைக்குரிய உட்பிரிவுகைளை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபையில் செவ்வாய்கிழமையான இன்று என்ஆர்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இன்று சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் சிஏஏ-என்பிஆர்- என்ஆர்சி குறித்து விவாதிக்க வேண்டும் ஒத்திவைப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுடன் இணைந்து கொண்டு வந்தார்.
தேஜஸ்வி யாதவ்
இதை சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரி ஏற்றார். எனினும் கேள்வி நேரத்தில் விவாதிக்க முடியாது என்று மறுத்தார். அப்போது தேஜஸ்வி யாதவ், கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அடுத்த அமர்வின் போது விவாதிப்பதாக முதல்வர் நிதீஷ்குமார் உறுதி அளித்ததை சுட்டிக்காட்டினார். இதையடுத்து பிற்பகலுக்கு பிறகு ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் தொடர்ந்தது.
கடும் விவாதம்
அப்போது சிஏஏ , என்ஆர்சி, என்பிஆருக்கு எதிராக எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர் நிதீஷ்குமார் பேசிக்கொண்டிருக்கும் போது, "காலா கனூன்' ( கருப்பு சட்டங்கள்) என எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். இதற்கு பாஜக அமைச்சர்கள் நந்த் கிஷோர் யாதவ் மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர், "பாராளுமன்றம் ஒரு கறுப்புச் சட்டத்தை நிறைவேற்றுமா?" சூடான விவாதங்கள் இருதரப்பிலும் நிகழ்ந்தன, இரு தரப்பிலிருந்தும் உறுப்பினர்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகளை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
என்ஆர்சி தேவையில்லை
பின்னர் சட்டசபை கூடிய போது பேசிய முதல்வர் நிதீஷ்குமார், "என் அம்மா எப்போது பிறந்தார் என்பது கூட எனக்குத் தெரியாது. என்.ஆர்.சி.யைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார். சர்ச்கைக்குரிய உட்பிரிவுகைளை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் முதல்வர் விளக்கம் அளித்தார். இதையடுத்து என்பிஆர்ருக்கு எதிராக பீகார் சட்டசபையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
நிதீஷ்குமார்
பாஜகவின் கூட்டணி கட்சி தான் ஐக்கிய ஜனதா தளம். இந்த கட்சியின் தலைவரான நிதீஷ்குமார், பாஜகவின் உதவியுடன் தான் ஆட்சி செய்து வருகிறார். இருப்பினும் என்ஆர்சி விவகாரத்தில் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார. பீகார் மாநிலத்தில் என்ஆர்சி கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் என ஏற்கனவே அவர் கூறியிருந்தார். இதற்கிடையே என்ஆர்சி குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.