கிராம மேம்பாட்டில் எக்ஸ்பர்ட்.. 100 நாள் வேலை திட்டத்தின் தந்தை .. யார் இந்த ரகுவன்ஷ் பிரசாத் சிங்?
பாட்னா: இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட முன்னாள் ரகுவன்ஷ் பிரசாத் சிங்தான் மிக பிரபலமான 100 வேலை திட்டத்தை கொண்டு வந்தவர். கொரோனாவில் இருந்து குணமடைந்த இவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங். 1973ல் அரசியலுக்கு வந்த இவர், 40 ஆண்டுகளாக இந்திய அரசியலிலும், பீகார் மாநில அரசியலிலும் மிக முக்கியமான நபராக இருந்துள்ளார். அரசியல் கடந்து காங்கிரஸ், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் என்று பல்வேறு கட்சி தலைவர்கள் உடன் இவர் நட்பாக இருந்துள்ளார்.
1946 ஜூன் 3ம் தேதி பிறந்த இவர் தன்னுடைய 74வது வயதில் காலமாகி உள்ளார். பீகாரின் வைஷாலி தொகுதியை தனது கோட்டையாக மாற்றிக்காட்டியவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவராக இவர் பதவி வகித்து இருக்கிறார்.
கட்சிக்குள் தன்னை ஓரங்கட்டுவதாக கூறி, சில நாட்களுக்கு முன் இவர் கட்சியில் இருந்து விலகினார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதாவிற்கு கடிதம் அனுப்பிவிட்டு, கட்சியில் இருந்து இவர் வெளியேறினார். 1996-2014 வரை தொடர்ச்சியாக இவர் நாடாளுமன்ற எம்பியாக இருந்தார்.
மொத்தமாக ஐந்து முறை நாடாளுமன்றத்திற்கு இவர் வைஷாலி தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதில் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இவர் மத்திய ஊரக அமைச்சரவை அமைச்சராக இருந்தார். இவர்தான் இந்தியாவில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டத்தை கொண்டு வர காரணமாக இருந்தார்.
லாலு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்த.. முன்னாள் அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் திடீர் மரணம்
உலகம் முழுக்க 2007-09ல் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது, இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதாரம் சரியாமல் இருக்க 2005ல் கொண்டு வரப்பட்ட இந்த 100 நாள் வேலை திட்டம் மட்டுமே காரணமாக இருந்தது. மக்கள் கையில் பணம் புழங்கிய காரணத்தால் இந்தியாவில் பெரிய அளவில் அப்போது பொருளாதார பாதிப்பு ஏற்படவில்லை.
அமெரிக்கா தொடங்கி சீனா வரை இந்தியா பொருளாதார சரிவை எப்படி சமாளித்தது என்று ஆச்சர்யப்பட்டது. 100 நாள் வேலை திட்டம் காரணமாக இந்தியாவில் மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையை தடுக்க இவர் காரணமாக இருந்தார்.
இவர் எம்எல்ஏவாகவும், பீகார் லெஜிஸ்டேட்டிவ் கவுன்சில் உறுப்பினராகவும், அதன் தலைவராகவும் இருந்துள்ளார். அதோடு இவர் பிஎச்டி முடித்தவர். கணித பேராசிரியராக இருந்துள்ளார். கிராமப்புற மேம்பாட்டில் இவர் இந்தியாவின் மிகப்பெரிய எக்ஸ்பர்ட்டாக இருந்துள்ளார். இவர்
1973-77 சம்யுக்த சோஷலிஸா கட்சியில் தனது பொது வாழ்க்கையையே தொடங்கினார். 1977-79ல் பீகார் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் பீகார் மாநில மின்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் என்று பல்வேறு துறையில் இவர் மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் அதில் இருந்து குணமடைந்தார். கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்பும் இவர் உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தால் எய்ம்ஸ் மருத்துவமனையில் டெல்லியில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து இவர் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.