எகிறும் மோடியின் செல்வாக்கு.. முதல்முறையாக நிதிஷை ஒதுக்க நினைக்கும் மக்கள்.. கருத்துகணிப்பில் பகீர்!
பாட்னா: பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி அமைக்க மக்கள் விரும்பவில்லை என தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதே போல் மோடியின் செல்வாக்கு வானளவு உயர்ந்துள்ளது என்றும் கருத்து கணிப்புகள் அடித்துச் சொல்கின்றன.
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10-ஆம் தேதி ஆகும்.
இந்த தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜேடியு- பாஜக ஒரு அணியாகவும், ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் மறு அணியாகவும் களத்தில் உள்ளன. இந்த நிலையில் லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் நிறுவனம் "வாக்காளர்களின் மனநிலை" என்ற பெயரில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. சுமார் 3700 பேரிடம் இந்த கணிப்புகள் கேட்கப்பட்டன.
பீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே
பீகார்
243 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த பீகாரில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி 133 முதல் 143 இடங்களை பெறும். காங்கிரஸின் மகா கூட்டணி 88 முதல் 98 இடங்கள் வரை வெற்றி பெறும். அது போல் லோக் ஜனதா கட்சி 2 முதல் 6 இடங்கள் வரை வெற்றி பெறும். 4 வாக்காளர்களில் ஒருவர் இன்னும் யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யவில்லை.
தேர்தல் நேரம்
அவர்கள் தேர்தல் நேரத்தில் முன்னுரிமை அளித்து வாக்களிப்பதாக தெரிவித்துள்ளார்கள். யாருக்கு வாக்களிப்பது என முடிவு செய்யாதவர்கள், அதை வெளிப்படையாக சொல்லாதவர்கள் என 10 சதவீதம் பேர் உள்ளனர். யாருக்கு வாக்களிப்போம் என சொல்லிவிட்டு ஆனால் அதை தேர்தல் நாளன்று மாற்றவும் வாய்ப்பிருப்பதாக 14 சதவீதம் பேர் கூறியுள்ளார்கள்.
நிதிஷ்குமாரின் செல்வாக்கு
நிதிஷ்குமாரின் செல்வாக்கு வெகுவாக குறைந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு 80 சதவீதம் பேர் நிதிஷின் செயல்பாடுகளில் திருப்தி அடைந்தார்கள். அது போல் 2010-இல் 77 சதவீதம் பேர் அவர் மாநிலத்திற்கு நல்லது செய்வதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்த தேர்தலில் வெறும் 52 சதவீதம் பேரே அவரது பணியில் திருப்தி இருப்பதாக கூறியுள்ளார்கள். இதிலிருந்து நிதிஷின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
பாஜக தலைமையிலான ஆட்சி
நிதிஷ்குமாரின் ஜேடியு- பாஜக தலைமையிலான ஆட்சி மீது திருப்தியா அல்லது அதிருப்தியா என கேட்டதற்கு திருப்தி என 52 சதவீதம் பேரும், அதிருப்தி என 44 சதவீதம் பேரும் கருத்து சொல்ல விரும்பவில்லை என 4 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளார்கள். நிதிஷின் அரசை காட்டிலும் மத்தியில் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு செல்வாக்கு அதிகமாகவே இருக்கிறது. மோடியின் செயல்பாடுகளில் 61 சதவீதம் பேர் திருப்திகரமாக உள்ளார்கள்.
14 சதவீதம் பேர்
முதல்முறையாக நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டாம் என வாக்காளர்கள் கருதுகிறார்கள். நிதிஷ் குமார் வேண்டும் என்பதை விட அவர் வேண்டாம் என்று சொல்பவர்களே அதிகம் ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் 14 சதவீதம் பேர் நிதிஷ்குமார் மீது அதிருப்தியில் உள்ளார்கள். எதிர்க்கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டால் இந்த தேர்தல் மிகவும் மாறுபட்ட நிலையில் காணப்படும் என தெரிகிறது.