உலகத்திலேயே எந்த கட்சியும் யோசிக்காத வாக்குறுதி.. பீகாரில் பாஜக அதகளம்.. அடுக்கடுக்காக கேள்விகள்
பாட்னா: உலகத்திலேயே எந்த ஒரு நாட்டிலும், அல்லது எந்த ஒரு கட்சியும் அறிவிக்காத வகையில் ஒரு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டு இருக்கிறது பாஜக.
பீகார் சட்டசபை தேர்தலை ஒட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த தேர்தல் அறிக்கையில் பாஜக கொடுத்துள்ள ஒரு வாக்குறுதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
என்ன வாக்குறுதி?
அப்படி என்ன தேர்தல் வாக்குறுதி என்கிறீர்களா? கோரோனோ வைரஸை ஒழிக்கக் கூடிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால், பீகார் மக்களுக்கு இலவசமாக வழங்குவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதை பார்த்ததுமே சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விட்டனர். பீகாருக்கு மட்டும் இலவசமாக தடுப்பூசி கொடுத்தீர்கள் என்றால் பிற மாநில மக்களுக்கு பணம் வாங்கிவிட்டு தடுப்பூசி கொடுப்பீர்களா? தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும் என்று அறிவித்து இருந்ததே, என்று சிலர் கேள்வி எழுப்பினர்.
பல கேள்விகள்
இன்னும் சிலரோ, பீகாருக்கு மட்டும் தடுப்பூசி வழங்கிவிட்டு பிற மாநில மக்களுக்கு தடுப்பூசியை வழங்கப் போவது கிடையாது என்று அர்த்தம் இதில் வருகிறதே என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். சரி ஓகே.. பாஜக வெற்றி பெற்றால் இலவசமாக பீகார் மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவதாக கூறுகிறீர்கள். ஒருவேளை பாஜக கூட்டணி தோல்வி அடைந்தால், பீகார் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்காமல் இருக்குமா, அல்லது பணம் வாங்கிவிட்டு வழங்குவீர்களா அல்லது வழங்கவே மாட்டீர்களா என்று குண்டக்க மண்டக்க கேள்விகளை எழுப்பி துளைத்து எடுத்து வருகின்றனர்.
பாஜக விளக்கம்
இப்படி ஒரு சர்ச்சையில் சிக்குவோம் என்று பாஜக முதலில் எதிர்பார்க்கவில்லை போல. அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்ததால், பாஜக ஊடகப் பொறுப்பாளர் மால்வியா அதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில் மற்ற தடுப்பூசிகளை போல கொரோனா தடுப்பூசியையும், குறைவான விலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும். இலவசமாக கொடுப்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். பாஜக இலவசமாக தடுப்பூசிகளை கொடுக்க முடிவு செய்துள்ளது. அதைத்தான் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது, என்று தெரிவித்துள்ளார்.
தேசிய கட்சி
இந்த சர்ச்சைகள் ஒருபுறம் என்றால், தடுப்பூசி கொடுப்பதை ஒரு சாதனையாக ஒரு கட்சி எப்படி தேர்தல் அறிக்கையில் சொல்ல முடியும் என்ற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகிறது. கொரோனா காரணமாக நாடு முழுக்க முடங்கிப் போயிருக்கிறது. தடுப்பூசி வந்தால்தான் மக்கள் அச்சமின்றி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். உயிர் பயம் இல்லாமல் வாழ முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இப்படியான ஒரு சூழ்நிலைக்கு நடுவே ஒரு மாநிலத்திற்கு மட்டும் இலவச தடுப்பூசி வழங்கும் ஒரு அறிவிப்பை தேசிய கட்சியான பாஜக சொல்வது முற்றிலும் முரணாக இருக்கிறது என்று ஆதங்கங்கள் எழுந்துள்ளன.