மீண்டும் முதல்வராக வாழ்த்துகள்.. போற போக்கில் சபிச்சுட்டுப் போயிட்டிங்களே கிஷோரு.. உதறலில் குமாரு!!
ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் பிரசாந்த் கிஷோர், அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரை வாழ்த்துவது போல மறைமுகமாக சவால் விட்டுள்ளார்.
Recommended Video
பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் பிரசாந்த் கிஷோர், அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமாரை வாழ்த்துவது போல மறைமுகமாக சவால் விட்டுள்ளார். இதனால் பீகார் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
சிஏஏ சட்டத்தை ஜேடியூ துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் தொடக்கத்தில் இருந்து எதிர்த்து வந்தார். தனது கட்சியையும் மீறி அவர் மசோதாவை எதிர்த்து வந்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த சண்டையை தொடர்ந்து நேற்று பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.கட்சியில் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது, அவருடன் பேச கூடாது என்று தலைவர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள், எம்.பி., மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பவன் வர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவரும் நிதிஷ் குமாருக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார்.
பவன் வெர்மா
தன்னுடைய நீக்கம் தொடர்பாக தற்போது பவன் வெர்மா பதில் அளித்துள்ளார். அதில், நிதிஷ் சென்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டார். அவரின் முடிவிற்கு நன்றி. நான் என்னுடைய பொறுப்பில் இருக்கும் போது மிகவும் கஷ்டப்பட்டு அவருக்கு ஆதரவாக பேசினேன், ஆதரவாக செயல்பட்டேன். நீங்கள் மீண்டும் எப்படியாது பீகார் முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்கு என்னுடைய உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள், என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் எப்படி
இந்த நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் இதற்கு பதில் சொல்லி இருக்கிறார். தன்னை கட்சியில் இருந்து நீக்கிய நிதிஷ் குமாருக்கு அவர் நன்றி சொல்லி உள்ளார். அதில், மிக்க நன்றி நிதிஷ் குமார். பீகாரின் முதல்வராக நீங்கள் மீண்டும் தேர்வு செய்யப்படுவதற்கு என்னுடைய சிறந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்றும் கிஷோர் குறிப்பிட்டுள்ளார். பீகாரில் இந்த வருடம் ஜூன் மாதம் தேர்தல் நடக்க உள்ளது.
பீகார் நிலை
பிரசாந்த் கிஷோர்தான் பீகாரில் நிதிஷ் குமார் ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இவர்தான் தேர்தல் ஆலோசனைகளை வழங்கினார். இவர் தேர்தலில் போடும் திட்டங்கள் எப்போதும் தோல்வி அடைந்தது இல்லை. மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி, ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி, 2014 தேர்தலில் பாஜக என்று இவர் வகுத்துக் கொடுத்த தேர்தல் திட்டங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றிபெற்றது.
வெளியேற்றம் எப்படி
இதனால்தான் இவரின் வெளியேற்றம் நிதிஷ் குமாரை கலங்க வைத்துள்ளது. பீகாரில் தன்னுடைய ஆட்சிக்கு எதிராக கிஷோர் ஏதாவது செய்வாரே என்று கேள்வி எழுந்துள்ளது. இவர் காங்கிரஸ் கட்சியை பீகாரில் முன்னிறுத்தி, தேர்தல் திட்டங்களை வகுப்பாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அப்படி நடக்கும் பட்சத்தில் பாஜகவிற்கு மிகப்பெரிய எதிரியாக பிரசாந்த் கிஷோர் உருவெடுக்க வாய்ப்புள்ளது. மோடி பிரதமராக காரணமாக இருந்தவரே அவரை எதிர்க்கும் நிலை உருவாகி இருப்பது பெரிய அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.