ராப்ரி - சோனியா! அமித் ஷாவின் ராஜதந்திரத்தை தூசு தட்டிய 2 "பெண்கள்".. பீகாரில் பாஜக வீழ்ந்தது எப்படி
பாட்னா: பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அமித் ஷா எவ்வளவோ முயன்றும் முடியாமல் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. அங்கு பாஜக - ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்து உள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகவும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். அதோடு மீண்டும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளார். தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உதவியுடன் நிதிஷ் குமார் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார்.
இச்சந்திப்பின் போது 160 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தமக்கு இருப்பதால் புதிய ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் நிதிஷ்குமார்.
சரித்திரம்...பீகார் மாநிலத்தின் முதல்வராக 8-வது முறையாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ்குமார்!
அமித் ஷா
பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை காப்பாற்ற அமித் ஷா எவ்வளவோ முயன்றும் முடியாமல் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. முக்கியமாக நேற்று அமித் ஷா நிதிஷுக்கு நேரடியாக போன் செய்து பேசி உள்ளார். ஆனால் அமித் ஷாவால் நிதிஷை சமாதானம் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. டெல்லி சார்பாக பாஜக அனுப்பிய 2 தூதுவர்களும் கூட பீகாரில் நிதிஷ் குமாரை சமாதானம் செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் அமித் ஷாவால் செய்ய முடியாததை இரண்டு பெண் அரசியல் தலைவர்கள் பீகாரில் நிகழ்த்தி காட்டி உள்ளனர்.
இரண்டு பெண்கள்
பீகாரில் இன்று நடைபெற்ற மாற்றங்களுக்கு பின் இரண்டு பெண்கள் முக்கியமான காரணமாக அமைந்து உள்ளனர். 40 நாட்களுக்கு முன் மஹாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ந்ததுமே நிதிஷ் குமார் அடுத்து நமக்கும் இந்த நிலை ஏற்படலாம் என்று கவலைப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி மகாராஷ்டிரா ஆட்சி கலைப்பிற்கு முன்பே அதாவது ஏப்ரல் - மே மாதத்திலேயே பாஜகவை கழற்றிவிடலாமா என்ற எண்ணத்திற்கு நிதிஷ் வந்துள்ளார். ஆனால் பாஜகவை கழற்றிவிட்டால் மீண்டும் ஆட்சி அமைக்க லாலு பிரசாத் யாதவ் குடும்பம் அவரின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும்.
ஆதரவு தேவை
ஆனால் தேஜஸ்வியோ நிதிஷ் குமாரை "சந்தர்ப்பவாதி மாமா" என்று விமர்சித்து வந்தார். தேஜஸ்வி நிதிஷை சந்திக்கவோ, பேசவோ தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அப்போதுதான் சோனியாவின் முதல் தூது அரங்கேறி உள்ளது. நிதிஷ் குமார் சோனியாவிடம் சமாதானம் பேச வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து சோனியா லாலு பிரசாத் யாதவ் மூலம் தேஜஸ்வி யாதவை சமாதானம் செய்துள்ளார். நடந்தது நடந்ததாக இருக்கும். இனி நடப்பதில் கவனம் செலுத்து என்று லாலு தேஜஸ்விக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்.
சோனியா அறிவுரை
சோனியாவின் இந்த முயற்சியால் தேஜஸ்வி கொஞ்சம் மனம் இறங்கி வந்துள்ளார். ஆனால் அதன்பின் லாலுவின் மனைவியும், தேஜஸ்வி அம்மாவுமான ராப்ரி தேவிதான் இன்னொரு முக்கியமான ரோல் செய்துள்ளார். கடந்த மே மாதம் ராப்ரி தேவி வீட்டில் இப்தார் விருந்து கொடுக்கப்பட்டது. இந்த விருந்திற்கு திடீரென அவர் நிதிஷை அழைத்தார். இந்த விருந்தில்தான் தேஜஸ்வி - நிதிஷ் மீண்டும் நட்பாகி உள்ளனர். ராப்ரி தேவிதான் இவர்கள் மீண்டும் நட்பாக சேர முக்கிய காரணமாக இருந்ததாக என்று கூறப்படுகிறது.
பாஜக வீழ்ச்சி
இந்த விருந்திற்கு பின்புதான் நிதிஷ் மீது பாஜக கடும் கோபம் அடைந்தது. பீகார் அரசியல் மொத்தமாக மாறியது அந்த விருந்தில்தான். அதோடு இன்றும் கூட காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் எல்லாம் ராப்ரி தேவி வீட்டில்தான் ஆலோசனை செய்து நிதிஷை ஆதரிப்பதாக முடிவு செய்தன. ராப்ரி தேவி பாஜக ஆட்சியை மாற்றியதில் மிகப்பெரிய ரோல் ப்ளே செய்துள்ளார். அது மட்டுமின்றி நிதிசும் பதவி விலகியதும் உடனடியாக ராப்ரி தேவியைத்தான் சந்தித்தார். சோனியா - ராப்ரி தேவி இருவரும் சத்தமே இன்றி செயல்பட்டு பீகாரில் பாஜகவை வீழ்த்தி உள்ளனர்.