பிரதமர் மோடிக்கு நான் ஹனுமான்... என் நெஞ்சை பிளந்து காட்டட்டுமா? சிராக் பாஸ்வான் பொளேர் பேச்சு
பாட்னா: பிரதமர் மோடிக்கு நான் ஹனுமானைப் போல ஒரு பக்தனாக மதிப்பு வைத்திருக்கிறேன் என்று லோக்ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி அமைத்துள்ளன. இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன.
சிராக் பாஸ்வான் நிலைப்பாடு
ஆனால் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் லோக்ஜனசக்தி எடுத்திருக்கும் வினோத நிலைப்பாடு காரணமாக ஜேடியூவில் கடும் அதிருப்தி நிலவுகிறது. பீகார் தேர்தலில் ஜேடியூவை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது லோக் ஜனசக்தி; ஆனால் பாஜகவுடனான கூட்டணியில் இருக்கிறோம் என்கிறது அந்த கட்சி.
பாஜக மீது கோபத்தில் ஜேடியூ
இதனை பாரதிய ஜனதா கட்சியும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. ஜேடியூ கொடுத்த நெருக்கடியால் பிரதமர் மோடியின் படத்தை லோக் ஜனசக்தி பயன்படுத்தக் கூடாது என்று மட்டும்தான் கூறியிருக்கிறது பாஜக. ஆனால் லோக் ஜனசக்தியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றெல்லாம் பாஜக அறிவிக்காமல் இருப்பது ஜேடியூவை கடும் கோபம் அடைய வைத்திருக்கிறது.
நெஞ்சை பிளந்து காட்டனுமா?
இதனிடையே பாட்னாவில் செய்தியாளர்களிடம் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் கூறியதாவது: ஜேடியூ கொடுத்த நெருக்கடி காரணமாகவே பிரதமர் மோடியின் படத்தை பயன்படுத்தக் கூடாது என பாஜக கூறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மீது அளவுகடந்த பக்தியை வைத்திருக்கிறேன். பிரதமர் மோடிக்கு நான் ஒரு ஹனுமான் போல எப்போதும் இருப்பேன். அந்த ஹனுமான் நெஞ்சை பிளந்து ராமபிரானை காட்டியதைப் போல நானும் தேவைப்பட்டால் நெஞ்சை பிளந்து அதில் பிரதமர் மோடியை காட்ட தயாராகவும் இருக்கிறேன்.
பாஜக- எல்ஜேபி கூட்டணி ஆட்சி
மேலும் நிதிஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக ஏற்கமாட்டோம் என சிராக் பாஸ்வான் கூறிவருவது பிரதமர் மோடி, அமித்ஷாவின் கருத்துக்கு எதிரானது என பாஜக மூத்த தலைவரான துணை முதல்வர் சுஷில் மோடி கூறியிருந்தார். இது தொடர்பாக சிராக் பாஸ்வான் கூறுகையில், இந்த பேச்சுகள் வருத்தம் தருகின்றன. இது எல்லாமே ஜேடியூ கொடுத்து வரும் நெருக்கடியால்தான்; சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜகவும் எல்ஜேபியும் இணைந்து ஆட்சி அமைக்கும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.