தோல்வியால் கவலைப்படவில்லை.. ஆனால் காரணத்தை நிச்சயம் ஆராய வேண்டும்.. நிதிஷ் குமார்
சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து நிதிஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்
பாட்னா: சட்டசபை இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். தோல்வி குறித்து தான் கவலைப்படவில்லை என்று கூறியுள்ள நிதீஷ் குமார், ஆனால், தோல்விக்கான காரணம் குறித்து நிச்சயம் ஆராயப்படும் என்று கூறியுள்ளார்.
பாஜக கூட்டணிக் கட்சிகளில் முக்கியமானது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம். பீகாரில் நடந்த சட்டசபை இடைத் தேர்தலில் நிதீஷ் கட்சிக்கு பெரும் தோல்வி கிடைத்துள்ளது.
பீகாரில் மொத்தம் 5 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் 4 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட்டது. அதில் 2 தொகுதிகளை (சிம்ரி பக்தியார்பூர், பெல்ஹார்) லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திடமும், ஒரு தொகுதியை சுயேச்சையிடமும் பறி கொடுத்தது. நாலந்தா தொகுதியில் மட்டும் அது வெற்றி பெற்றது.
இதனால் ஐக்கிய ஜனதாதளம் கட்சி வட்டாரம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்து நிதீஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "தேர்தல் தோல்விகள் என்பது வழக்கமானதுதான். ஒரு தேர்தலில் தோற்போம், அடுத்த தேர்தலில் வெல்வோம். இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் தோல்விக்கான காரணத்தை ஆராய வேண்டும்" என்றார் நிதீஷ் குமார்.
ஆனால் இடைத்தேர்தல் தோல்வி என்பது நிதீஷ் குமாருக்கு தொடர் கதையாகியுள்ளது. கடந்த ஆண்டு 2 சட்டசபைத் தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடந்தது. அதில் 3 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதாதளம் தோல்வி அடைந்தது நினைவிருக்கலாம்.
ஆனால் கடந்த ஏப்ரல் - மே மாதத்தில் நடந்த லோக்சபா பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39ல் வென்றது. அதில் ஐக்கிய ஜனதாதளம் 16, பாஜக 17 மற்றும் லோக்ஜன சக்தி கட்சி 6 தொகுதிகளிலும் வென்றன. இதை மனதில் வைத்துதான் தற்போதைய தோல்வி குறித்து தான் கவலைப்படவில்லை என்று நிதீஷ் குமார் கூறுகிறாரோ என்னவோ!