தகனம் செய்ய காசு இல்லை... உயிரிழந்தவரின் சடலத்துடன் வங்கியை முற்றுகையிட்ட கிராம மக்கள்
பாட்னா: பிகாரில் உயிரிழந்தவரின் உடலை தானம் செய்யக் காசு இல்லை என்பதால் அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் காசை தர வேண்டும் என்பதை வலியுறுத்தி உயிரிழந்தவரின் சடலத்துடன் கிரம மக்கள் வங்கி கிளையை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் 55 வயதான மகேஷ் யாதவ். நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
இவருக்கு குடும்பம், சொந்தம் என்று யாரும் இல்லாததால் பல பணி நேரமாக அவரது உடல் வீட்டிலேயே இருந்தது. அதன் பிறகே அக்கம் பக்கத்தினர் மகேஷ் யாதவ் உயிரிழந்ததைக் கண்டறிந்தனர்.
வீட்டில் காசில்லை
இதையடுத்து உயிரிழந்தவரின் உடலுக்கு இறுதிச் சடங்கைச் செய்ய வீட்டில் எதாவது விலை உயர்ந்த பொருட்கள் இருக்குமா என்று தேடியுள்ளனர். இருப்பினும், அவரது வீட்டில் அவர்களால் பணம், விலை உயர்ந்த பொருள் என எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
வங்கிக் கணக்கில் ரூ. 1.18 லட்சம்
அவரது வீட்டிலிருந்த பாஸ்புக் மூலம் மகேஷ் யாதவின் வங்கிக் கணக்கில் சுமார் 1.18 லட்ச ரூபாய் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவரின் சடலத்தை அருகிலிருந்த கனரா வங்கிக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
வங்கி முற்றுகை
மேலும், இறுதிச் சடங்கை மேற்கொள்ளப் பணம் வேண்டும் என்றும் பணத்தைத் தரும் வரை வங்கியிலிருந்து சடத்தை எடுக்க மாட்டோம் என்றும் அவர்கள் வங்கி மேலாளரை மிரட்டியுள்ளனர். நிலைமை மோசமானதை உணர்ந்த வங்கி ஊழியர்கள், கிராம மக்களுக்கு தங்கள் பணத்தில் ரூ .10,000ஐ கொடுத்தனர். இதைத் தொடர்ந்தே, கிரம மக்கள் சடலத்தை வங்கியிலிருந்து எடுத்துச் சென்றனர்
யாருக்கும் கொடுக்க முடியாது
இந்த விநோதமான சம்பவம் குறித்து கனரா வங்கியின் கிளை மேலாளர் சஞ்சீவ் குமார் கூறுகையில், "இது ஒரு அசாதாரண நிகழ்வு. இதுபோல ஒரு சம்பவம் எங்கும் நடந்திருக்க முடியாது. அவரது வங்கிக் கணக்கில் ரூ .118,000 இருப்பது உண்மைதான். ஆனால். அவர் தனது வாரிசாக யாரையும் குறிப்பிடவில்லை. மகேஷின் வாரிசுகள் யாரும் இந்த பணத்தைக் கோரவில்லை என்றால், இந்த பணத்தை யாருக்கும் கொடுக்க முடியாது" என்றார்.
நாங்கள் தான் பார்த்துக் கொண்டோம்
மகேஷ் யாதவ் எந்த நிலத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கவில்லை என்றும் பல மாதங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த அவருக்கு அக்கம் பக்கத்தினரே பார்த்துக்கொண்டதாக அவரது வீட்டின் அருகே வசிக்கும் சகுந்தலா தேவி கூறினார்.