1200 கி.மீ. சைக்கிள் பயணம்.. சகிப்புத்தன்மையின் சாதனை.. பீகார் சிறுமியை பாராட்டிய இவான்கா டிரம்ப்
பாட்னா: டெல்லியிலிருந்து பீகார் மாநிலத்திற்கு காயமுற்ற தந்தையை சைக்கிளில் அமர வைத்து 1200 கி.மீ. தூரம் அழைத்து வந்த சிறுமியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பாராட்டியுள்ளார்.
பீகார் மாநிலம் தர்பங்காவை சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவரது மகள் ஜோதி குமாரி (15). பாஸ்வான் டெல்லியில் ரிக்ஷா ஓட்டி வந்தார். வேலையை இழந்த பாஸ்வானுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
வீட்டு வாடகை கொடுக்கக் கூட பணமில்லை. அவர்களுக்கு உதவி செய்யவும் யாருமில்லை. அப்போது சொந்த ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்து லாரி டிரைவரிடம் விலை பேசினர். அவர் தர்பங்காவுக்கு அழைத்து செல்ல ரூ 6000 கேட்டுள்ளார்.
Corona Spike in India: அதிர வைக்கும் பரவல்.. வெறும் 24 மணி நேரத்தில் 6654 பேருக்கு பாசிட்டிவ்!
பீகார் மாநிலம்
இவர்களிடம் அவ்வளவு பணம் இல்லாததால் ரூ 500-க்கு பழைய சைக்கிளை வாங்கியுள்ளனர். இதையடுத்து அவரது மகள், காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமர வைத்து மே 10-ஆம் தேதி டெல்லியிலிருந்து புறப்பட்டார். சுமார் 7 நாட்கள் 1200 கி.மீ.தூரம் பயணம் செய்து பீகார் மாநிலம் தர்பங்காவை கடந்த மே 16ஆம் தேதி வந்தடைந்தனர்.
பயிற்சி
15வயது சிறுமி தனது தந்தையை 7 நாட்கள் சைக்கிளில் உட்கார வைத்து அழைத்து வந்த சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த சிறுமியின் மனதைரியத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அவரது சைக்கிள் ஓட்டும் திறமையை அறிந்த தேசிய சைக்கிள் பந்தய கூட்டமைப்பு லாக்டவுனுக்கு பின்னர் அவரை டெல்லிக்கு அழைத்து சென்று பயிற்சி அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவான்கா டிரம்ப் பாராட்டு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும் ஆலோசகருமான இவான்கா டிரம்ப் அந்த சிறுமியின் செயலை பாராட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் 15 வயது ஜோதி குமாரி காயமடைந்த தனது தந்தையை 7 நாட்களில் 1200 கி.மீ. தூரம் தனது சைக்கிளின் பின்புறத்தில் வைத்து தங்கள் சொந்த கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
கூட்டமைப்பு
சிறுமியின் பாசமும் சகிப்புத்தன்மையின் சாதனையும் இந்திய மக்களின் கற்பனையையும் சைக்கிள் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது என கூறியுள்ளார் இவான்கா. இந்த சிறுமிக்கு ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். வழியெங்கும் பயம் ஏதும் இல்லை என்றும் தங்களை போன்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் சாலைகளில் சென்ற வண்ணம் இருந்ததாகவும் ஜோதிகுமாரி தெரிவித்தார்.