போதும் நிறுத்துங்க.. பொது மேடையில் திடீரென்று கையெடுத்து கும்பிட்ட நிதிஷ் குமார்.. ஏன் தெரியுமா?
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் அம்மாநில செய்தியாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை வைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா: ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் அம்மாநில செய்தியாளர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு கோரிக்கை வைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த அரசு விழா ஒன்றில் நிதிஷ் குமார் இப்படி செய்தார்.
பெரும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானது. நாடு முழுக்க இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. முக்கியமாக அரசியல் கட்சிகள் இடையே, கட்சிகளுக்கு உள்ளேயும் கூட இந்த சட்டத்திற்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.
சீனாவுடன் நட்பு.. இந்தியாவுடன் சண்டை.. திடீரென்று மோதும் அமெரிக்கா.. வர்த்தக போர் மூளும் அபாயம்!
என்ன குழப்பம்
இந்த மசோதாவை தொடக்கத்தில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணை தலைவர் பிரசாந்த் கிஷோர் எதிர்த்து வந்தார். தனது கட்சியையும் மீறி அவர் மசோதாவை எதிர்த்து வந்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உத்தரவு பிறப்பித்தார். இதனால் கட்சிக்குள் பெரிய அளவில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பீகாரில் இன்னொரு பக்கம் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கட்சிக்கு இடையிலும் கூட நிறைய குழப்பம் ஏற்பட்டது.
எப்படி மோசம்
இதனால் கட்சிக்குள் இருக்கும் வேறு சில தலைவர்களும் நிதிஷ் குமாருக்கு எதிராக பேசி வருகிறார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள், எம்.பி., மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பவன் வர்மா நிதிஷ் குமாருக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். நிதிஷ் குமாருக்கு எழுதிய கடிதத்தை அவர் பொதுவில் வெளியிட்டுள்ளார். பீகார் அரசியலில் பவன் குமார் கடிதம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்ன கடிதம்
அந்த கடிதத்தில், பாஜகவிற்கு எதிராக நிதிஷ் குமார் அணி திரட்ட முயன்று கொண்டு இருக்கிறார். அவர் சிஏஏவை ஆதரித்தது தவறு. கட்சிக்கு உள்ளேயே அவருக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றெல்லாம் கருத்துக்கள் இடம்பெற்று இருந்தது. இந்த கடிதம் வைரலானது. இது பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் பிளவை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த கடிதம் குறித்து நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
என்ன சொன்னார்
நேற்று நடந்த அரசு விழா ஒன்றில் பேசிய நிதிஷ் குமார், தேவையில்லாத விஷயங்களுக்கு நம்ம ஊரில் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். மீடியா எதை எதையோ செய்தியாக வெளியிடுகிறார்கள். இதை ஏற்க முடியாது. பவன் குமாருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள். எனக்கு கஷ்டமாக இருக்கிறது. உங்களை கையெடுத்து கும்புடுறேன். மக்களுக்கு தேவையானதை மட்டும் பேசுங்கள், என்று உருக்கமாக குறிப்பிட்டார். பவன் குமார் லெட்டர் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் உடையும் நிலையில் இருப்பதாக பீகார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.