35 ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் 4-வது முறை பீகார் முதல்வராக பதவியேற்கும் நிதிஷ்குமார்
பாட்னா: பீகாரில் கடந்த 35 ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் போட்டியிடாமலேயே அம்மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக பதவியேற்கிறார் நிதிஷ்குமார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வென்றது. இதனையடுத்து அம்மாநிலத்தில் இந்த கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெற்றது. இதில் ஜேடியூ தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பீகார்: பாஜக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக நிதிஷ்குமார் தேர்வு-நாளை பதவி ஏற்பு!
முதுபெரும் தலைவர்கள்
பீகாரில் சோசலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனால் அரசியல் களத்துக்கு வந்தவர் நிதிஷ்குமார். விபிசிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட முதுபெரும் தலைவர்களுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர் நிதிஷ்குமார். 1977-ல் முதல் முறையாக பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் நிதிஷ்குமார்.
சட்டசபை தேர்தலில் போட்டி இல்லை
ஆனால் 1985-ல் நிதிஷ்குமார் தாம் தோற்ற ஹர்னாட் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். நிதிஷ்குமார் சந்தித்த கடைசி சட்டசபை தேர்தல் அதுதான். கடந்த 35 ஆண்டுகாலமாக எந்த சட்டசபை தேர்தலிலும் நிதிஷ்குமார் போட்டியிடவே இல்லை.
முதல்வராக 6-வது முறை பதவி ஏற்பு
தற்போது பீகார் மாநிலத்தின் முதல்வராக முறைப்படி 6-வது முறையாக நிதிஷ்குமார் பதவி பிரமாணம் ஏற்கிறார். ஏற்கனவே 2000, 2005, 2010, 2015, 2017 என 5 முறை முதல்வராக பதவி ஏற்றவர் நிதிஷ்குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் 1989-ம் ஆண்டு முதல் 6 முறை லோக்சபா தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர் நிதிஷ்குமார்.
தேர்தலில் போட்டி இல்லை
2000-ம் ஆண்டில் மத்திய வேளாண்துறை அமைச்சராக இருந்தார் நிதிஷ்குமார். அப்போதுதான் முதல் முறையாக நிதிஷ்குமார் பீகார் முதல்வரானார். ஆனால் அவரது பதவிக் காலம் 7 நாட்கள்தான் நீடித்தது. பின்னர் 2005-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பீகார் முதல்வராக அடுத்தடுத்து பதவியில் நீடித்தார் நிதிஷ்குமார். 2015 சட்டசபை தேர்தலில் ஜேடியூ-ஆர்ஜேடி-காங். கூட்டணி வென்றதால் மீண்டும் முதல்வரானார் நிதிஷ்குமார். இந்த கூட்டணி நீடிக்காமல் போகவே முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் பாஜகவுடன் இணைந்து மீண்டும் முதல்வரானார் நிதிஷ்குமார். தற்போதைய சட்டசபை தேர்தலிலும் நிதிஷ்குமார் போட்டியிடவில்லை.
எம்.எல்.சியாகவே நீடிப்பு
இருந்தபோதும் நிதிஷின் ஜேடியூ-பாஜக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் பீகார் மேல்சபை உறுப்பினராகவே (எம்.எல்.சி) இருந்து முதல்வர் பதவியில் நீடித்து வருகிறார் நிதிஷ்குமார். இம்முறையும் எம்.எல்.சியாகவே இருந்து முதல்வராக தொடர உள்ளார் நிதிஷ்குமார்.
வாரிசுகளுடன் மல்லுகட்டு
நிதிஷ்குமாரின் சமகால அரசியல் தலைவர்களாக பீகாரில் லாலுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் இருந்தனர். இவர்களில் ராம்விலாஸ் பாஸ்வான் காலமாகிவிட்டார். லாலு பிரசாத் யாதவ் சிறை வாசம் அனுபவிக்கிறார். இந்த நிலையில் பாஸ்வான், லாலுவின் மகன்களாகிய சிராக் பாஸ்வான், தேஜஸ்வி யாதவுடன் சமமான அரசியல் செய்ய் வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார் முதுபெரும் தலைவரான நிதிஷ்குமார்.