ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 83% இடஒதுக்கீடு கோரி ஐக்கிய ஜனதா தளம் அதிரடி தீர்மானம்
பாட்னா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு சமூகங்களுக்கு 83% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மாநிலங்களில் இடஒதுக்கீடு 50%-க்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கூடுதல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு அதற்கு அரசியல் சாசன பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மத்திய அரசு முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு அளித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இடஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட்டு வருகிறது.
ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் மீண்டும் பணியில் சேர வேண்டும்.. போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்
ஜார்க்கண்ட் தேர்தல்
தற்போது நவம்பர்- டிசம்பரில் ஜார்க்கண்ட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்று பீகாரில் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தமது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் வியூகம் வகுத்துள்ளது.
ஜார்க்கண்ட்டில் 83% இடஒதுக்கீடு
இதனிடையே ராஞ்சியில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் ஜார்க்கண்ட் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடியாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 83% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
83% இடஒதுக்கீடு விவரம்
அதாவது பழங்குடியினருக்கு 32%; தலித்துகளுக்கு 14%; இதரபிற்படுத்தப்பட்டோருக்கு 27%; முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% என மொத்தம் 83% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிறது அத்தீர்மானம். ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது 60% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியினருக்கு 26%; தலித்துகளுக்கு 10%; இதரபிற்படுத்தப்பட்டோருக்கு 14%; முற்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கரில் 82% இடஒதுக்கீடு
இதில்தான் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது ஐக்கிய ஜனதா தளம். அண்மையில் சத்தீஸ்கரில் 82% இடஒதுக்கீடு வழங்குவதாக அம்மாநில காங்கிரஸ் அரசு அறிவித்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27%; பழங்குடியினருக்கு 32%; தலித்துகளுக்கு 13%; முற்பட்ட வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% என மொத்தம் 82% இடஒதுக்கீடு வழங்குகிறது சத்தீஸ்கர் அரசு.