பீகார் தேர்தல் கருத்து கணிப்பில் நிதிஷ்குமாரை நெருங்கிய தேஜஸ்வி யாதவ்.. கை ஓங்கும் லாலு குடும்பம்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் மக்கள் செல்வாக்கில் நிதிஷ்குமாரை தேஜஸ்வி யாதவ் நெருங்கிவிட்டார். இது லாலு குடும்பத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
பீகாரில் அக்டோபர் 28-ஆம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. லாக்டவுனுக்கு பிறகு நடத்தப்படும் முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தலுக்கு கூடுதல் செலவு ஆவதுடன் கூடுதல் கவனமும் செலுத்தப்படுகிறது.
இதில் யாருக்கு செல்வாக்கு உண்டு, யார் வெற்றி பெற வாய்ப்புண்டு என்பது குறித்து லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பை சுமார் 3700 பேரிடம் நடத்தியுள்ளது.
பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. 143 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு- லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் கணிப்பு
நிதிஷ்குமார்
இந்த கருத்துக் கணிப்பில் 31 சதவீதம் பேர் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக வேண்டும் என விரும்புகிறார்கள். என்னதான் இந்த முதல்வர் பதவிக்கான கணிப்பில் நிதிஷ் முன்னணி வகித்தாலும் செல்வாக்கு என பார்க்கும் போது அவருக்கு சரிவே காணப்படுகிறது.
சாய்ஸ்
இந்த தேர்தலில் யார் முதல்வராக வர விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு முதல் சாய்ஸ் நிதிஷ்குமாராக உள்ளது. அடுத்தது 27 சதவீதம் பேர் தேஜஸ்வி யாதவ் வர வேண்டும் என விரும்புகிறார்கள். 5 சதவீதம் பேர் சிராக் பாஸ்வானும், 4 சதவீதம் பேர் சுஷில் குமார் மோடியும், 3 சதவீதம் பேர் லாலு பிரசாத் யாதவும் வர வேண்டும் என விரும்புகிறார்கள்.
கண்டுபிடிப்பு
இதில் மற்றொரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு என்னவெனில் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் வரவேண்டும் என 31 சதவீதம் பேர் விரும்புகிறார்கள். அதே வேளையில் தேஜஸ்விக்கு 27 சதவீதம் பேரும், அவரது தந்தை லாலுவுக்கு 3 சதவீதம் பேரும் கருத்து கணிப்பில் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
செல்வாக்கு
ஆக தந்தை மகன் ஆகியோருக்கு இருக்கும் செல்வாக்கை சேர்த்தால் 27+3= 30 சதவீதம் வருகிறது. எனவே நிதிஷ்குமாருக்கும் லாலு குடும்பத்திற்கும் இடையே இடைவெளி என்பது 1 சதவீத வித்தியாசம்தான். கடந்த 1995-ஆம் ஆண்டு லாலு குடும்பத்திற்கு 23 சதவீதமும் நிதிஷுக்கு 7 சதவீதமும் செல்வாக்கு இருந்தது.
லாலு குடும்பம்
அது போல் 2000-ஆம் ஆணடில் லாலு குடும்பத்திற்கு 26 சதவீதமும் , நிதிஷுக்கு 6 சதவீதமும் இருந்தது. 2005-ஆம் ஆண்டு லாலு குடும்பத்திற்கான செல்வாக்கு குறைந்து நிதிஷின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. நிதிஷுக்கு 24 சதவீதமும் லாலுவுக்கு 18 சதவீதமும் இருந்தது. அதன் பின்னர் 2005 அக்டோபர் முதல் 2015 வரை நிதிஷுக்கு ஏறுமுகம்தான்.
நிதிஷுக்கு 53 சதவீதம்
அக்டோபர் 2005-இல் நிதிஷுக்கு 43% பேரும், லாலு குடும்பத்திற்கு 26 சதவீதம் பேரும், 2010-ஆம் ஆண்டு நிதிஷுக்கு 53 சதவீதம் பேரும், லாலு குடும்பத்தினருக்கு 28 சதவீதம் பேரும், 2015-ஆம் ஆண்டில் நிதிஷுக்கு 40 சதவீதம் பேரும், லாலு குடும்பத்திற்கு 9 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர். இந்த 2020ஆம் ஆண்டு நிதிஷுக்கு 31% பேரும், லாலுவுக்கு 30 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.