பாஜகவை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தூக்கி போடட்டும்-கூட்டணிக்கு நாங்க ரெடி- லாலுவின் ஆர்ஜேடி அதிரடி
பாட்னா: பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை விட்டு பீகார் முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் விலகினால் கூட்டணிக்கு தயாராக இருப்பதாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் சட்டசபைக்கு கடந்த 2020-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதேநேரத்தில் பாஜகவுக்கு சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆதரவு தந்தது. மேலும் ஜேடியூவுக்கு எதிராக லோக் ஜனசக்தி வேட்பாளர்களையும் நிறுத்தியது. இன்னொரு பக்கம் லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் ஒரு அணியாக களம் கண்டன.
8 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க
சட்டசபை பலம்
அத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 125 இடங்களில் வென்றது. பீகாரில் ஆட்சி அமைக்க தேவை மொத்தம் 122 எம்.எல்.ஏக்கள். பாஜக 74; ஜேடியூ 43; விஐபி கட்சி 4; ஹிந்துஸ்தான் ஆவாம் கட்சி 4 இடங்களில் வென்றிருந்தன. ஆர்ஜேடி கூட்டணி மொத்தம் 110 இடங்களைப் பெற்றிருந்தது. ஆர்ஜேடி 75 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 19, இடதுசாரிகள் 16 இடங்களில் வென்றனர். ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 5 இடங்களில் வென்றது. தற்போது ஓவைசி எம்.எல்.ஏக்கள் ஆர்ஜேடியில் இணைந்ததால் அக்கட்சிக்கு மொத்தம் 80 இடங்கள் உள்ளன.
ஜேடியூ-பாஜக உறவில் விரிசல்
பீகார் சட்டசபை தேர்தலின் போதும் சரி.. தேர்தலுக்கு பின்பு கூட்டணி ஆட்சி அமைந்தாலும் சரி ஜேடியூ-பாஜக இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பீகாரில் உறவாடி கெடுக்கும் பாலிசி அடிப்படையில் ஜேடியூவை இல்லாது ஒழிப்பதில் பாஜக மும்முரமாகவே இருக்கிறது. இதனால்தான் தேர்தலின் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியை, ஜேடியூவுக்கு எதிராக இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தது பாஜக. அக்கட்சி எதிர்பார்த்தபடியே ஜேடியூ குறைவான இடங்களில்தான் வென்றது.
ஆட்சி கவிழ்கிறது
கடந்த 2 ஆண்டுகளாக முட்டல் மோதலுடன் கூட்டணி அரசு ஓடிக் கொண்டிருக்க, இப்போது ஜேடியூ-பாஜக கூட்டணி முறியும் நிலை உருவாகிவிட்டது. இதனால் பாஜக-ஜேடியூ ஆட்சி கவிழும் நிலை உள்ளது. 2024 லோக்சபா தேர்தலை கணக்கில் போட்டு இப்போதே பாஜகவிடம் இருந்து விலகுகிற முடிவுக்கு வந்துவிட்டார் நிதிஷ்குமார் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்தே ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுக்கு நட்புக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறார் நிதிஷ்குமார்.
ஆர்ஜேடி தயார்
இது தொடர்பாக ஆர்ஜேடியின் தேசிய துணைத் தலைவர் சிவானந்த் திவாரி கூறுகையில், பீகார் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தில் இருப்பது தெளிவாகி உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை நிதிஷ்குமார் தூக்கி எறிந்தால், அவரது ஜேடியூவுடன் கூட்டணி அமைக்க ஆர்ஜேடி தயாராகவே உள்ளது என்றார். தற்போதைய நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 125; ஆர்ஜேடி அணிக்கு 115 இடங்கள் உள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகி ஆர்ஜேடி அணியில் இணைந்தால் ஆர்ஜேடி-ஜேடியூ-காங்கிரஸ்- இடதுசாரிகள் இணைந்து எளிதாக புதிய ஆட்சியை அமைத்துவிட முடியும் என்பது கள நிலவரமாகும்.