பீகாரில் 125 குழந்தைகள் இறப்புக்கு லிச்சி பழம் காரணமா? ஆய்வு முடிவால் வட இந்தியாவில் பீதி
Recommended Video
பாட்னா: பீகாரில் 125க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து மூளைக்காய்ச்சல் காரணமாக இறந்து போன நிலையில், குழந்தைகளின் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அம்மாநில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே லிச்சி பழத்தை குழந்தைகள் சாப்பிட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் வடமாநிலங்களில் லிச்சி பழம் குறித்து பீதி ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் முஷாபர்பூரில் இந்த ஜுன் மாதத்தில் கடுமையான மூளையழற்சி நோய் அல்லது மூளைக் காய்ச்சல் நோய் அறிகுறியுடன் 309 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளனர். நோய் முற்றாத நிலையில் இருந்த குழந்தைகள் உடல்நலம் தேறியதால் டிச்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் பீகார் அரசு, யாரும் மூளை காய்ச்சல் நோயால் இறக்கவில்லை என்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் இறப்பு
ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து போவதற்கு கடுமையான வெயிலில் குழந்தைகள் விளையாடுவதை ஒரு காரணமாக பீகார் அரசு சொல்கிறது. இதனிடையே லிச்சி பழம் இயல்பாகவே இரத்த்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது என்பதால் அந்த பழம் சாப்பிட்டதால்தான் குழந்தைகள் இறந்து வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. கோடைக்காலமான தற்போது இந்த பழம் தான் வடமாநிலங்களில் மிக சீப்பாக கிடைக்கிறது. இந்த பழத்தை இரவில் சாப்பிட்டுவிட்டு குழந்தைகள் உணவு சாப்பிடாமல் உறங்கிவிடுவார்கள். இதனால் பாதிப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்கள்.
மூளைக்காய்ச்சல் ஏன்
இதனால் குழந்தைகள் இறந்து வருவதற்கான காரணம் லிச்சி பழமா அல்லது சர்க்கரை அளவு காரணமா என்ற ரீதியில் ஆய்வுகள் இப்போது நடந்துவருகிறது. ஏனெனில் எதன் காரணமாக குழந்தைகள் இறந்தார்கள். அங்கு திடீரென மூளை காய்ச்சல் ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த ஒரு காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் செய்தியாளர்கள் இதனை மர்ம நோயாகவே கருதி பலபெயர்களில் வடமாநிலங்களில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.
லிச்சியால் பாதிப்பு
மத்திய அரசு இந்த நோய் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு லிச்சி பழம் குறித்து ஆய்வு செய்த மருத்துவர்கள், உணவு அருந்தாமல் காலையில் குழந்தைகள் லிச்சி பழம் சாப்பிட்டால் நோய் ஏற்படுவது போன்ற நிலையை அடைவதாக கூறியள்ளனர். இது பற்றி டாக்டர் ஜான் கூறுகையில், பசியுடன் லிச்சி பழத்தை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு மேலும் குறைந்துவிடும். மேலும் லிச்சி பழத்தில் உள்ள ஒருவகை ரசாயணம் மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் இப்போது கதை வேறாக உள்ளது என்றார்.
குழந்தைகள் பாதிப்பு
டாக்டர் கோபால் ஷங்கர் கூறுகையில், "முஷாபர்பூரில் சமீபகாலமாக குழந்தைகள் இறந்துவருவதற்கு குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட தோல்வியைத்தான் காரணமாக பார்க்கிறோம்.அதிகப்படியான வெயில், மிகக்குறைந்த மழை உள்ளிட்ட காரணங்களால் இப்படி ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு வைரஸ் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டாக பேசப்பட்டது. இப்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2005, 2011, 2013, 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2014ம் ஆண்டு தொற்றுநோய் ஏற்பட்டு 700 பேர் உயிரிழந்தனர். தற்போது மழையில்லாமல் வெயிலும் அதிகமாக இருப்பதால் பருவநிலையில் பாதிப்பால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
இரவில் கட்டாயம் சாப்பிடணும்
இந்த சூழலில் லிச்சி பழத்தை குழந்தைகள் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு மிக குறைந்து பாதிக்கப்படுவார்கள் என லிச்சி பழத்தை சாப்பிடாமல் இருப்பது குழந்தைகளுக்கு நல்லது என்றார். இதேபோல் இப்போது வெயில் கொடுமையாக இருப்பதால் நிச்சயமாக குழந்தைகளை இரவில் உணவு அருந்தாமல் தூங்க அனுமதிக்கவே கூடாது. கட்டாயம் சாப்பிட வைக்க வேண்டும்" என்றார்.