ராவணனை போல அகங்காரம்.. கிம் ஜாங் உன் போல சர்வாதிகாரம் கொண்டவர் மம்தா.. கிரிராஜ் சிங் தாக்கு
பாட்னா: நாடு முழுவதும் பிரபல முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகள், எதிர்கட்சியினரை கலங்கடித்துள்ளதாக மத்திய அமைசச்ர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகளை வைத்து அரசியல் கட்சியினர் வாக்குவாதம் செய்து கொள்வது இன்னும் குறைந்தபாடில்லை.
நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில் எக்ஸிட் போல் முடிவுகளின் படி, பாரதிய ஜனதா தான் பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர், லோக்சபா தேர்தலுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் எதிர்க்கட்சியினரை கதிகலங்க செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
பாரதிய ஜனதாவே வெற்றி பெறும் என உறுதியாக தெரிந்து விட்டதால், அனைத்து எதிர்கட்சிகளும் தேவையின்றி இப்போதிலிருந்தே வாக்குப்பதிவு இயந்திரங்களை குறை கூற துவங்கிவிட்டதாக சாடியுள்ளார்.
மேற்குவங்க முதல்வரின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த கிரிராஜ் சிங், ராவணனை போல மம்தா பானர்ஜி மிகுந்த அகங்காரத்துடன் செயல்படுவதாக விமர்சித்தார். கிம் ஜாங் உன் வடகொரிய நாட்டை சர்வாதிகாரத்துடன் ஆட்சி செய்வதை போலவே, மேற்கு வங்க மாநிலத்தை மம்தா ஆட்சி செய்து வருவதாக குறிப்பிட்டார் கிரிராஜ் சிங்.
மேலும் பேசிய அவர், ஏழை எளியவர்களை தேடி சென்று சந்திக்கும் ஒரே அரசியல் தலைவர் மோடி மட்டுமே. எனவே மோடி மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகிறார் என்றே கருத வேண்டும். மேலும் வரும் ஆட்சியில் ஆளுங்கட்சியும் நாங்கள்தான், எதிர்க்கட்சியும் நாங்கள் தான் என்றார்.