பாம்பு கடித்ததால் விபரீதம்.. மனைவியையும் கடித்துக் கொல்ல முயற்சித்த கணவர்!
பாம்புக் கடிபட்ட கணவர் மனைவியைக் கடித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா: பீகாரில் பாம்பு கடிபட்ட கணவர், மனைவியையும் தன்னுடன் சொர்க்கம் அழைத்துச் செல்வதாகக் கூறி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள சமஸ்டிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சங்கர் ராய். இவரது மனைவி அமர்திதேவி. சம்பவத்தன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த சங்கரை கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் மயங்கிய சங்கரின் உடலில் உடனடியாக விஷம் ஏறத் தொடங்கியது.
கணவரின் வாயில் நுரை தள்ளுவதை எதேச்சையாக பார்த்த அமர்திதேவி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கணவரின் முகத்தில் தண்ணீரைத் தெளித்துள்ளார். இதனால் சங்கருக்கு மயக்கம் தெளிந்து சுயநினைவு வந்துள்ளது. தன்னை பாம்பு கடித்ததையும், உடல் முழுவதும் விஷம் ஏறியதையும் தெரிந்து கொண்ட சங்கர், தன் மனைவியையும் தன்னுடன் சொர்க்கம் அழைத்துச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமர்திதேவியும் சம்மதிக்கவே, அவரது கையைப் பிடித்து சங்கர் கடித்துள்ளார். இதன் மூலம் தன் உடலில் பரவியுள்ள விஷம், அமர்திதேவி உடலுக்கும் பரவும் என்பது அவரது எண்ணம். ஆனால், அப்படி நடக்கவில்லை.
அதற்குள் சங்கரின் உடல்நிலை மோசமாகவே, தகவலறிந்து விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். அமர்திதேவிக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தான் சாக இருந்த நிலையில் தன் மனைவியையும் தன்னுடன் சேர்த்து உயிரழக்க வைக்க கணவர் மனைவியின் கையை கடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.