அப்படியே கையை வெட்டி எறியனும் போல இருந்துச்சு.. லாலு மகளின் ஆவேசம்
Recommended Video
பாட்னா: 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது ராஷ்டிரிய ஜனதாதளத்திலிருந்து விலகி, நமக்கு நம்பிக்கை துரோகம் செய்து பாஜகவில் ராம் கிருபால் யாதவ் இணைந்தபோது, அவருடைய கையை வெட்டி எறிய வேண்டும் என்று எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது என்று லாலு பிரசாத்தின் மகள் மிசா பார்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாலுவுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்திற்குமே கூட நெருக்கமானவர் ராம்கிருபால் யாதவ். 2014ம் ஆண்டு இவர் திடீரென ஆர்ஜேடியிலிருந்து விலகினார். நரேந்திர மோடிதான் இந்தியாவின் ஒரே நம்பிக்கை என்று கூறி பாஜகவில் இணைந்தார்.
அவரை வரவேற்று அரவணைத்த பாஜக அவரை பாடலிபுத்ரா லோக்சபா தொகுதியில் நிறுத்தியது. இந்தத் தொகுதி லாலு குடும்பத்தினர் போட்டியிடும் தொகுதி. அவர்களுக்கு இங்கு வெற்றி என்பது கெளரவப் பிரச்சினையாகும். இத்தொகுதியில் லாலுவின் மகள் மிசா பார்தி போட்டியிட்டார். ராம் கிருபால் யாதவிடம் தோல்வியைத் தழுவினார்.
துரோகம்
வெற்றிக்குப் பின்னர் ராம்கிருபால் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு கட்சி நம்பிக்கை துரோகம் செய்து விட்டது. நான் ஆர்ஜேடியின் விசுவாசமான சேவகனாக இருந்தேன். ஆனால் எனக்கு டிக்கெட் மறுத்து துரோகம் செய்தனர். இதனால்தான் பாஜகவில் இணைய நேரிட்டது என்று கூறியிருந்தார்.
மிசா பார்தியின் கோபம்
தற்போது ராம் கிருபால் யாதவ், மோடி அரசில் அமைச்சராக இருக்கிறார். இந்த ராம்கிருபால் யாதவைத்தான் தற்போது வறுத்தெடுத்துள்ளார் மிசா பார்தி. பாட்னாவில் நடந்த கூட்டம் ஒன்றில் மிசா பார்தி பேசுகையில், ராம் கிருபால் யாதவ் போன்ற ஒரு துரோகியை யாரும் பார்த்திருக்க முடியாது.
வெட்டணும் போல இருந்தது
அவர் மீது நாங்கள் மிகுந்த மரியாதை, மதிப்பு வைத்திருந்தோம். ஆனால் எப்போது சுஷில் குமார் மோடியுடன் அவர் கை கோர்த்தாரோ அப்போதே அது போய் விட்டது. அவர் கட்சியை விட்டு விலகியபோது அவரது கையை வெட்டித் துண்டாக்க வேண்டும் என்று எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
மீண்டும் போட்டியிடுவேன்
நான் மீண்டும் பாடலிபுத்ராவில்தான் போட்டியிடப் போகிறேன். நிச்சயம் இந்த முறை வெல்வேன். கடந்த தேர்தலில் தயாராவதற்கு கால அவகாசம் இல்லாமல் போய் விட்டது. ஆனால் இந்த முறை நிச்சயம் வெல்வேன் என்றார் மிசா பார்தி. கையை வெட்டுவேன் என்று மிசா பார்தி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.