அதே பாணி.. பீகாரை வெல்ல பாஜக வகுக்கும் 'குஜராத் வியூகம்..' மோடி அரசின் அதிரடி அறிவிப்புகள்
பாட்னா: குஜராத் தேர்தலுக்கு முன்பு எப்படியெல்லாம் மத்திய அரசால் நலத்திட்டங்கள் அவசர கோலத்தில் அறிவிக்கப்பட்டதோ, அதேபோல இப்போது பீகார் தேர்தலுக்கு முன்பாக மோடி அரசு திட்டங்கள் பலவற்றை அறிவித்துக் கொண்டு இருக்கிறது.
குஜராத்தை போலவே, கடுமையான போட்டி சூழல் நிலவுவதால், பாஜக இதுபோன்ற யுக்தியை கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.
பீகாரில் 541 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழு நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார். இதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார்.
பீகார் தேர்தல்... மருத்துவமனையில் பாஸ்வான்... கூட்டணி குறித்து மகன் சிராக் முடிவெடுக்க அதிகாரம்!
குடிநீர் திட்டங்கள்
இந்த திட்டங்களில் நான்கு நீர் வழங்கல், இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் ஒன்று நதிக்கரை மேம்பாடு தொடர்பானவையாகும். பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பாட்னா முனிசிபல் கார்ப்பரேஷனில் உள்ள பியூர் மற்றும் கர்மலிச்சக்கில், நமாமி கங்கே திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவான் மற்றும் சாப்ரா மாவட்ட நகராட்சி பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்காக AMRUT மிஷனின் கீழ் நீர் வழங்கல் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மற்ற இரண்டு நீர் வழங்கல் திட்டங்கள் முங்கர்-ஜமல்பூர் நகரப் பகுதியில் வரும்.
மிதிலாஞ்சல் பிராந்தியம்
செப்டம்பர் 13ம் தேதி, பீகாரில் மூன்று பெட்ரோலியத் துறை திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். செப்டம்பர் 12 ம் தேதி, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, பீகாரின், தர்பங்காவிலிருந்து சாத் திருவிழாவிற்கு சிறப்பு விமானம் இயக்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம், தர்பங்கா டெல்லி, மும்பை மற்றும் பெங்களூருடன் தர்பங்கா விமான மார்க்கத்தில் இணைக்கப்படும். மிதிலாஞ்சல் பிராந்திய மக்களின் நீண்டகால கோரிக்கையாக இது இருந்து வந்தது.
எய்ம்ஸ் மருத்துவமனை
இதேபோல தர்பங்காவில் புதிய அகில இந்திய மருத்துவ அறிவியல் இன்ஸ்ட்டிடியூட் (எய்ம்ஸ்) நிறுவ மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
திட்ட மதிப்பு ரூ .1264 கோடி. ஒப்புதல் தேதியிலிருந்து 48 மாத காலத்திற்குள் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க 2019ம் ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும் இதுவரை, அது கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் பாணி
மற்றொரு விஷயம் இதில் கவனிக்கத்தக்கதாக உள்ளது. குஜராத்தில் 2017ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கு தேர்தல், மாதிரி நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய நாட்களில், பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு பல பயணங்களை மேற்கொண்டு, பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
சாலை திட்டம்
அகமதாபாத்-ராஜ்கோட் தேசிய நெடுஞ்சாலையின் ஆறு வழித்தடங்களையும், ராஜ்கோட்-மோர்பி மாநில நெடுஞ்சாலையின் நான்கு பாதை திட்டங்களையும் மோடி அறிவித்தார். மேலும், முழுமையான தானியங்கி பால் பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் ஆலையை திறந்து வைத்தார்.
குஜராத் திட்டங்கள்
பிரதமர் மோடி ராஜ்கோட்டில் உள்ள கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார், சுரேந்திரநகரில் குடிநீர் விநியோக குழாய் திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், குஜராத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சற்று முன்பு கூட, கம்பே வளைகுடாவில் 615 கோடி ரூபாய் ரோ-ரோ (ரோல்-ஆன் ரோல்-ஆஃப்) படகு சேவையின் முதல் கட்ட திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
குஜராத்தில் கடினம்
குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசிடமிருந்து, பாஜக கடுமையான சவாலை எதிர்கொண்டது. குஜராத்தின் முதல்வர் வேட்பாளராக மோடி இருந்தவரை எளிதாக வெற்றி பெற்ற பாஜகவால் இம்முறை அப்படிச் செய்ய முடியவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் கடைசி நிமிட அறிவிப்புகள் குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைக்க உதவியது. பாஜக 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் 77 தொகுதிகளிலும் வென்றன.
தேர்தல் ஆணையம் தாமதம்
குஜராத் மற்றும் பீகார் தேர்தல்களுக்கு இடையிலான மற்றொரு பொதுவான விஷயம், தேர்தல் தேதி அறிவிப்பில் தேர்தல் ஆணையம் செய்த கால தாமதம்தான். குஜராத்தில், தேர்தல் அறிவிப்பு 12 நாட்கள் தாமதமாக வெளியானது. பீகாரில், தற்போதைய பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் நாளான நவம்பர் 29 க்கு முன்னர் சட்டமன்றத் தேர்தல் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தினாலும், தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. பீகார், கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் சமீபத்தில் வெள்ளத்தால் பீகாரில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன.
எனவே முன்கூட்டியே தேர்தல் தேதியை அறிவித்தால், தேர்தல் ஏற்பாடுகளை செய்ய அது வசதியாக இருக்கும். ஆனால் அது நடக்கவில்லை.