பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்ததே அமித்ஷாதான்.. அதை கொஞ்சமாவது நினைக்க வேண்டும்.. நிதிஷ்
பாட்னா: அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்த்து கொள்ளுமாறு கூறியதே அமித்ஷாதான் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் வாக்களித்தது. ஆனால் அக்கட்சியின் துணைத் தலைவரும் அரசியல் ஆலோசகருமான பிரசாந்த் கிஷோர் கட்சியின் கருத்துக்கு மாறாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரசாந்த் இது போல் பேசி வருவது பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கட்சி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசம்
இதுகுறித்து பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஒருவர் கடிதம் எழுதினார். அதற்கு நான் பதில் அளித்தேன். ஒருவர் ட்வீட் செய்தார். அவரும் ட்வீட் செய்யட்டும். யார் எவ்வளவு நாட்கள் தங்க விரும்புகிறார்களோ அத்தனை நாட்கள் தங்கிக் கொள்ளட்டும். எங்கள் கட்சி வித்தியாசமான கட்சி.
அடிப்படை கட்டமைப்பு
அவர் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளுக்கு அரசியல் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். ஆனால் நான் ஒன்றை மட்டும் தெளிவாக கூறி கொள்கிறேன். அவர் கட்சியில் இருப்பது என்றால் இருக்கட்டும். ஆனால் எங்கள் கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு கட்சிக்கு செல்ல விரும்பினால் அவர் செல்லட்டும். நான் தடுக்கவில்லை.
விரும்புதல்
அவர் கட்சியில் சேருவதற்கு யார் காரணம் தெரியுமா. அமித்ஷாதான். அவர்தான் கிஷோரை ஐக்கிய ஜனதா தளத்தில் சேர்த்து கொள்ளுமாறு தெரிவித்தார். அதை கொஞ்சமாவது அவர் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு வேளை அவர் கட்சியை விட்டு செல்ல விரும்புகிறாரோ என்னவோ தெரியவில்லை என நிதிஷ்குமார் தெரிவித்தார்.
பாஜக கூட்டணி
ஜம்மு- காஷ்மீர் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தார். இதுகுறித்து பிரசாந்த் கிஷோரிடம் கேட்டதற்கு நிதிஷ்குமார் பேசிவிட்டார். நீங்கள் எங்கள் பதிலுக்காக காத்திருக்க வேண்டும். நான் பீகாருக்கு வந்து பதிலளிப்பேன் என தெரிவித்துள்ளார்.