நம்பர் முக்கியம் பிகே.. பிரசாந்த் கிஷோரை வைத்து அமித் ஷாவை நெருக்கும் நிதிஷ்.. பீகாரில் புது சிக்கல்
பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி அடுத்த சட்டசபை தேர்தலில் நிறைய பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
பாட்னா: பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி அடுத்த சட்டசபை தேர்தலில் நிறைய பிரச்சனையை சந்திக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
தேசிய அளவில் பாஜகவிற்கு முக்கிய நண்பனாக திகழ்ந்து வரும் கட்சி ஐக்கிய ஜனதா தளம் எனப்படும் ஜேடியூ. மகாராஷ்டிராவில் பாஜகவை சிவசேனா கழற்றிவிட்ட போது கூட, பாஜகவிற்கு உற்ற தோழனாக ஜேடியூ இருந்து வருகிறது. அடுத்து வருடம் அங்கு நடக்கும் சட்டசபை தேர்தலை இரண்டு கட்சிகளும் சேர்ந்து சந்திக்க தயாராகி இருக்கிறது.
பீகாரில் முறைப்படி அடுத்த வருடம் அக்டோபர் மாதம் தேர்தல் நடக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அதற்கு முன்பாக ஏப்ரல் மே மாதங்களில் தேர்தலை நடத்த திட்டமிடுவார் என்று கூறுகிறார்கள்.
குறையும் வெப்பநிலை.. எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை.. டெல்லியை முடக்கிய பனி, புகை.. மக்கள் கடும் அவதி
தேர்தல் எப்படி
ஜேடியூ மற்றும் பாஜக கூட்டணி குறித்து தெரிந்து கொள்ள, கடந்த கால தேர்தல் வெற்றிகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக மற்றும் ஜேடியூ கூட்டணி கடந்த லோக்சபா தேர்தலில் பீகாரில் 40 இடங்களில் 39 இடங்களில் வென்றது. இதில் பாஜக 17, ஜேடியூ 16, எல்ஜேபி 6 இடங்களில் வெற்றிபெற்று சாதனை படைத்தது.
அதற்கு முன்பு
அதேபோல் 2015 சட்டசபை தேர்தலில் பீகாரில் உள்ள 243 இடங்களில் ஜேடியூ 70 இடங்களில் வென்றது. பாஜக 54 இடங்களில் வென்றது. ஆனால் இதில் பாஜக, ஜேடியூ கூட்டணி வைக்காமல் போட்டியிட்டு, அதன்பின் கூட்டணி வைத்தது. அதற்கு முன் 2009 தேர்தலில் ஜேடியூ 142 இடங்களிலும், பாஜக 101 இடங்களிலும் கூட்டணி வைத்து போட்டியிட்டது.
எப்போதும் எப்படி
எப்போதும் பீகாரில் ஜேடியூதான் பாஜக கூட்டணியில் அதிக இடங்களை பெற்றுள்ளது. மாநில அளவில் கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமார்தான் இருந்து இருக்கிறார். முன்பு மோடி உடன் அவ்வளவு நெருக்கமாக இல்லாமல் இருந்த நிதிஷ் குமார் தற்போது மோடியுடன் மிகவும் நட்பாகவும் மாறியுள்ளார். அங்கு கூட்டணியின் மாநில முகம் எப்போதும் நிதிஷ் தான்.
ஆனால் என்ன
ஆனால் தற்போது பீகாரில் பாஜக ஜேடியூ கட்சியை விட அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கடைசி நேரத்தில் கழன்று கொண்டது போல ஜேடியூ செய்ய வாய்ப்புள்ளது. இதனால் அதிக இடங்களில் போட்டியிட பாஜக திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக பல இடங்களில் அமித் ஷா மறைமுகமாகவே பேட்டி அளித்தார்.
என்ன பேட்டி
அமித் ஷா கடைசியாக பீகார் தேர்தல் குறித்து பேட்டி அளித்த போது கூட, பீகாரில் ஜேடியூ உடன் கூட்டணி தொடரும். ஆனால் பெரும்பாலும் பாஜக 50% இடங்களில் போட்டியிடும். ஜேடியூ மற்றும் எல்ஜேபி மீதி இடங்களில் போட்டியிடும் என்று குறிப்பிட்டார். இதுதான் ஜேடியூவையும் , நிதிஷ் குமாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
என்ன அதிர்ச்சி
இதனால் கட்சியின் தேசிய துணை தலைவர் பிரசாந்த் கிஷோரை வைத்து பாஜகவிற்கு அழுத்தம் கொடுக்க நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளார். பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து பாஜகவை பல விஷயங்களில் எதிர்த்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில், பாஜகவிற்கு எதிராக மாநில கட்சிகளை வலுப்படுத்தி வருகிறார். தமிழகத்திலும் திமுகவிற்காக தேர்தல் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
பிரசாந்த் பேட்டி
இந்த நிலையில் தற்போது அவரை நிதிஷ் குமார் பயன்படுத்த தொடங்கிவிட்டார். பீகார் தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்து போது கூட, பீகாரில் ஜேடியூ பாஜக உடன் கூட்டணி வைத்தால் அதிக இடங்களை பெற வேண்டும். சென்ற தேர்தலை விட ஜேடியூ அதிக இடங்களை பெற வேண்டும். அப்போதுதான் நிதிஷ் குமார் மற்றும் ஜேடியூ தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடியும். குறைந்து இடங்களில் போட்டியிட்டால் பாஜக முதல்வர் பதவி கேட்கும் என்று பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
பிரசாந்த் கிஷோர்
குடியுரிமை சட்ட திருத்தம் காரணமாக பாஜக மீது கோபத்தில் இருக்கும் பிரசாந்த் கிஷோரை வைத்து பாஜகவிற்கு அழுத்தம் கொடுக்க நிதிஷ் முடிவு செய்துள்ளார். அதற்கு முன்னோட்டம்தான் இந்த பேட்டி என்று கூறுகிறார்கள். வரும் நாட்களில் பெரும்பாலும் பிரசாந்த் கிஷோர்தான் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று குறிப்பிடுகிறார்கள்.