அரசுக்கு எதிரான கருத்தா... கம்பிதான்.. களிதான்.. நிதீஷ் குமார் வார்னிங்!
பாட்னா : அரசு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவும், அவதூறாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் சிறை தண்டனை உறுதி என பீகார் அரசு அறிவித்துள்ளது. இணையதள விமர்சனங்களை கட்டுப்படுத்தும் சைபர்கிரைம் பிரிவு உத்தரவில் முதல்வர் நிதிஷ்குமார் கையெழுத்திட்டுள்ளார்.
இணையதள குற்றங்களை கண்காணித்து, கடுமையாக நடவடிக்கை எடுக்கும் மிக அரிதான மாநிலங்களில் பீகாரும் ஒன்று. அந்த வகையில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி நய்யர் ஹஸ்னைன் கான், மாநிலத்தின் அனைத்து துறை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், சமூக வலைதளங்களில் சில நபர்கள் மற்றும் அமைப்புகள் அரசு, அதன் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக தவறான மற்றும் அவதூறு கருத்துக்களை பரப்பி வருவது அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் சைபர் குற்றப்பிரிவின் கீழ் வருகிறது. இது போன்ற குற்றங்களை தடுத்து, சட்டத்தின் கீழ் கொண்டு வர அனைத்து அதிகாரிகளும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான தகவல்களை அளிக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
ஏற்கனவே பொது கூட்டங்கள் மற்றும் கட்சி கூட்டங்களில் தனது அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுவதாக நிதிஷ்குமார் தனது கோபத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது ஐஜி எழுதி உள்ள கடிதம் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.
ஐஜி.,யின் கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமார் தான் ஊழல் மற்றும் குற்றவாளிகளை பாதுகாக்கும் பிதாமகராக உள்ளார். இந்த கருத்திற்காக முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.