பாஸ்வான் மகனும், தேஜஸ்வி யாதவும் போட்ட செம ஸ்கெட்ச்.. ஜெர்க்கான நிதிஷ்குமார்.. பாஸாகுமா பாஜக கூட்டணி
பாட்னா: ஒரு பக்கம், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ். இன்னொரு பக்கம் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பாஸ்வான், என இரட்டை தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ளது பீகாரில் நிதீஷ் குமார் மற்றும் அவரது பாஜக கூட்டணி.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபை தொகுதியில், 122 தொகுதிகளில், ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், 121 தொகுதிகளில், கூட்டணி கட்சியான பாஜகவும் போட்டியிட உள்ளன. பீகார் மாநில சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் அங்கம் வகித்தது ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி. ஆனால் கூட்டணி உடைந்து, தனியாக போட்டியிடுவதாக லோக் ஜனசக்தி அறிவித்துள்ளது.
பாஸ்வான் மகனும், தேஜஸ்வி யாதவும் போட்ட செம ஸ்கெட்ச்.. ஜெர்க்கான நிதிஷ்குமார்.. பாஸாகுமா பாஜக கூட்டணி
பின்னணியில் ஸ்கெட்ச்
பெயருக்குத்தான் தனியாக கூட்டணி. மற்றபடி லோக் ஜன சக்தி கட்சி, மறைமுகமாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஒரு சூப்பர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், எதிர்க்கட்சியின் முதல்வர் வேட்பாளரும் லாலு மகனுமான தேஜஸ்வி போட்டியிடும் ராகோபுர், தொகுதியில் ராஜ்புத் ஜாதி பிரிவைச்சேர்ந்த வேட்பாளரை களமிறங்கியுள்ளார் சிராக் பாஸ்வான்.
பாஜக வாக்கு வங்கி பிரிப்பு
ராஜ்புத் என்ற உயர் ஜாதியினரின் வாக்குகள் எப்போதும் பாஜகவுக்கு செல்லக்கூடியவை. இந்த தொகுதியில் பாஜக சார்பில் தேஜஸ்வியை எதிர்த்து சதீஷ் யாதவ் போட்டியிடுகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு லாலு பிரசாத் யாதவின் மனைவியும் பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியை தோற்கடித்து அப்போது பெரும் அதிர்வை ஏற்படுத்தியவர். ஆனால், 2015ஆம் ஆண்டு இதே சதீஷ் யாதவை தேஜஸ்வி தோற்கடித்து பழி தீர்த்தார் என்பது வேறு விஷயம். இருப்பினும் இந்த முறை தேஜஸ்வி வெற்றியை மேலும் எளிமையாக்கும் விதமாகத்தான் பாஸ்வான் கட்சி, ராஜபுத்திர ஜாதியை சேர்ந்த ஒருவரை அங்கு போட்டியிட வைத்து உள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணி ஓட்டுகள் சிதறும். தேஜஸ்விக்கு வாக்கு வங்கி அதிகரிக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
திரி கொளுத்திய தேஜஸ்வி
இந்த நிலையில்தான் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில், "சிராக்கிடம் நிதிஷ்குமார் நடந்து கொண்ட விதம் கொஞ்சம் சரி கிடையாது. ராம்விலாஸ் பாஸ்வான் மறைந்த இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் அவரது மகன், சிராக்கிற்கு எல்லோரும் ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் நிதிஷ்குமார் நடந்துகொண்ட விதம் அநியாயமாக இருக்கிறது," என்று திரியைக் கொளுத்தி போட்டுள்ளார் தேஜஸ்வி யாதவ்.
சிராக் பாஸ்வான் குற்றச்சாட்டு
ஏற்கனவே நிதீஷ் குமார் மீது சிராக் பாஸ்வான் இதே மாதிரியான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். ராம்விலாஸ் பாஸ்வான் உடல், டெல்லியில் பீகார் இருந்து கொண்டு வரப்பட்ட போது ஏர்போர்ட் வந்து இருந்தார் முதல்வர் நிதிஷ்குமார். அப்போது அவர் காலில் தான் விழுந்ததாகவும், அவர் கண்டுகொள்ளவில்லை என்றும், பிறகு தனக்கோ தனது தாயாருக்கோ ஒரு ஆறுதல் கூட அவர் சொல்லவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார் சிராக் பாஸ்வான்.
வாக்குகள் பிரியும்
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் வாக்குகளை லோக் ஜன சக்தி கட்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாதவ் இனத்தவர்களின் வாக்குகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். இந்த இரு கட்சிகளுக்குமே பாஜக கூட்டணிதான் எதிரி. எனவே இரட்டை சவாலில் சிக்கியுள்ளார் நிதிஷ்குமார்.