'கேர்ள்ஸ் பாய்பிரண்ட்ஸை மாற்றுவது போல' கூட்டணியை மாற்றுகிறார்.. நிதிஷ் குமாரை விளாசும் பாஜக!
பாட்னா: "கேர்ள்ஸ் பாய்பிரண்ட்ஸை மாற்றுவது போல' நிதிஷ் குமார் எப்போ யார் கூட கூட்டணி வைப்பார், எப்போ விலகுவார் என்று கூற முடிவதில்லை" என பாஜக கட்சி விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பீகாரில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் நிதிஷ் குமார் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மாநில முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார். துணை முதல்வராக பாஜகவை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டார்.
பீகார் இளைஞர்களுக்கு அடித்தது யோகம்.. 10 லட்சம் பேருக்கு அரசு வேலை.. நிதிஷ் குமார் அதிரடி அறிவிப்பு
கூட்டணியில் இருந்து விலகல்
இதைத்தொடர்ந்து பாஜனதா-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே பாஜனதா மீது நிதிஷ் குமாருக்கு லேசான மனக்கசப்பு இருந்ததாக கூறப்பட்டது. மேலும் மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம் போல பாஜனதா எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் அதற்கான வேலையில் பாஜனதா ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் உஷாரான நிதிஷ் குமார், திடீரென பாஜனதா கூட்டணியில் இருந்து விலகி ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
எதிர்க்கட்சியாக
பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து மகாபந்தன் கூட்டணியை அமைத்து பீகாரின் முதல்வராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் 8-வது முறையாக மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வர் பொறுப்பை அவர் அலங்கரித்தார். துணை முதல்வராக ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார். இதனால் ஆட்சி அதிகாரத்தில் இருந்த பாஜனதா எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது.
கேர்ள்ஸ் பாய்பிரண்டை மாற்றுவது போல..
இதை சற்றும் எதிர்பாராத பாஜனதா அதிர்ச்சியடைந்தது. இது தொடர்பாக பாஜனதா கட்சியினர் நிதிஷ் குமாரை வசைபாடி வந்தனர். இதற்கு நிதிஷ் குமார் கூட்டணி அரசும் பாஜனதாவை வறுத்தெடுத்து வந்தது. இவ்வாறாக மாறி மாறி இரு கட்சிகளும் வசைபாடி வந்த நிலையில், பாஜகவை சேர்ந்த கைலாஷ் விஜய்வர்கியா என்பவர், ''கேர்ள்ஸ் பாய்பிரண்டை மாற்றுவது போல.. நிதிஷ் குமார் எப்போது, எந்த நேரத்தில் யார் கூட கூட்டணி அமைப்பார், விலகுவார் என்று கூறமுடிவதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
நெட்டிசன்கள் கேலி, கிண்டல்
இது தொடர்பாக அவர் கூறுகையில், நான் ஒருமுறை வெளிநாடு சென்றிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் சொன்னார்.. இங்குள்ள பெண்கள் தங்களது பாய் பிரண்டை எப்போதும், எந்த நேரத்திலும் மாற்றிக்கொள்வார்கள் என்றார்... இதுபோல தான் நிதிஷ் குமார் எப்போ யார் கூட கூட்டணி வைக்கிறார்.. எப்போது கூட்டணியை விட்டு விலகுவார் என்பது தெரியவில்லை...'' என்று கூறியுள்ளார். தற்போது இவரது கருத்து பீகார் அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமூக வலைத்தளத்தில் இவரது பேச்சுக்கு கேலியும் கிண்டலும் தெரிவித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
அக்னிபாத் சர்ச்சை
கைலாஷ் விஜய்வர்கியா இதுபோன்று சர்ச்சையில் சிக்குவது புதிது அல்ல. ஏற்கனவே இவர் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தில், அக்னிபாத் வீரர்களுக்கு பாஜனதா கட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு பணி வழங்கப்படும் என கூறினார். இந்த கருத்துக்கும் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இதற்கு விளக்கமளித்த கைலாஷ் விஜய்வர்கியா இந்த கருத்தை திரித்து வெளியிட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.