நிறைய கூட்டம் வந்தது.. ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் என்னாச்சு.. ரவிசங்கர் பிரசாத்
2019 தேர்தல் என்னாச்சு என்று ரவிசங்கர் பிரசாத் கேட்டுள்ளார்
பாட்னா: எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு கூட்டம் வருவதை வைத்து அவர்களுக்கு மக்கள் ஆதரவு என்று கூறி விட முடியாது. இப்படித்தான் 2019 லோக்சபா தேர்தலுக்கும் கூட அவர்களுக்கு கூட்டம் கூடியது. ஆனால் முடிவு என்னாச்சு என்று மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான ரவிசங்கர் பிரசாத் கேட்டுள்ளார்.
பீகாரில் தற்போது சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்து விட்ட நிலையில் 2வது கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ரவிசங்கர் பிரசாத் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கூட்டணி
"இத்தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். இதை நாங்கள் சாதாரண நம்பிக்கையாக சொல்லவில்லை. உறுதியான காரணங்களுடன்தான் சொல்கிறோம். எங்களது கடந்த ஐந்து ஆண்டு கால செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. பீகாரில் பிரதமர் மோடி அரசு பல்வேறு நலத் திட்டப் பணிகளை செய்துள்ளது. மக்களிடம் அச்சம் இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி
முன்பிருந்த ஆர்ஜேடி ஆட்சிக்கும், நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஆர்ஜேடி ஆட்சியில் மக்கள் பயத்துடன் வாழ்ந்து வந்தனர். அந்தப் பயத்தை நாங்கள் போக்கியுள்ளோம்.
லாலு
லாலு ஆட்சியின்போது மக்கள் சுதந்திரமாக செல்போன் பேசியபடி வெளியில் நடமாட முடிந்ததா.. இதைத்தான் நான் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் கேட்டேன். பலரும் தங்களது செல்போன் வழிப்பறி கொள்ளையர்களால் திருடப்பட்டதாக சொன்னார்கள். பீகார் மக்களுக்கு நிறைய கனவுகள் உள்ளன. அவற்றை நாங்கள் நிறைவேற்றுவோம்.
நம்பிக்கை
நிதீஷ் குமார் அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசுவதாக கூறப்படுவதை நான் ஏற்க மாட்டேன். ஒரு வேளை மக்களுக்கு ஏதாவது சாதாரண அதிருப்தி இருக்கலாம். ஆனால் பிரச்சாரத்தின்போது மக்கள் அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர். பிரதமர் மிகச் சிறப்பான பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது பேச்சுக்கள் மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளன.
தேஜஸ்வி
ஆர்ஜேடி கட்சியினரின் போஸ்டர்களில் தேஜஸ்வி யாதவின் தாய் தந்தை படத்தைப் போடாமல் பிரச்சாரம் செய்கின்றனர். ஏன் லாலு படத்தைப் போட என்ன தயக்கம் அவர்களுக்கு.. லாலுவும், அவரது மனைவியும் கிட்டத்தட்ட 15 வருடங்கள் பீகாரை ஆண்டுள்ளனர். பிறகு ஏன் அவர்களது படத்தைப் போட தயங்குகிறார்கள். மக்கள் நிராகரித்து விடுவார்களே என்ற அச்சம்தான் காரணம். லாலு படத்தைப் போட்டால் மக்களுக்கு பழைய அச்சம், போலீஸ் அராஜகம் உள்ளிட்டவை ஞாபகத்திற்கு வந்து விடும் என்ற பயம்தான் காரணம்.
லாலு
கடந்த லாலு - ராப்ரி ஆட்சிக்காலத்தில் மொத்தமே 95,000 பேருக்குத்தான் வேலையே கொடுத்துள்ளனர். இந்த லட்சணத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை தரப் போவதாக தேஜஸ்வி கூறுவது நகைச்சுவைக்கிடமானது. அதேசமயம், நிதிஷ் குமார் அரசு தனது ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் பேருக்கு வேலை கொடுத்துள்ளது. 3 லட்சம் ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது. 1.5 கோடி ஜீவிகா பணியாளர்கள் உள்ளனர். மேலும் ஒரு கோடி பேரை அதில் சேர்க்கவுள்ளோம்.
பயப்படவில்லை
தேஜஸ்வி யாதவ் கூட்டங்களுக்கு கூட்டம் வருவதாக சொல்வதை நான் ஏற்க மாட்டேன். அவருக்கு கூட்டம் வரலாம்.. ஆனால் எங்களுக்கு அதனால் எந்தப் பயமும் இல்லை. இதேபோலத்தான் கடந்த லோக்சபா தேர்தலின்போதும் அவர்களுக்குக் கூட்டம் வந்தது. ஆனால் முடிவு என்ன ஆனது. அவர்களுக்கு ஒரே ஒரு சீட்தான் கிடைத்தது. எனவே இந்த கூட்டத்தைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை.
உள்நோக்கம்
நிதீஷ் குமார் கூட்டங்களில் அவருக்கு எதிராக மக்கள் கோபமாக பேசுவதாக கூறுகிறார்கள். 25,000 பேர் கூடும் கூட்டத்தில் 10, 15 பேர் சத்தம் போடத்தான் செய்வார்கள். அவர்களும் கூட உள்நோக்கத்துடன் கோஷம் போடுபவர்களாக இருப்பார்கள். மீதமுள்ள அனைவருமே நிதீஷ் குமாருக்காக வந்தவர்கள். அதுதான் நாம் கவனிக்க வேண்டியது. அவர்களை மீடியாக்கள் காட்டுவதில்லை. மாறாக கோஷம் போடும் சின்னக் கூட்டத்தையே பெரிதாக காட்டுகிறார்கள்.
சிராக் பாஸ்வான்
லோக் ஜனசக்தி கட்சி குறித்து பேசுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை. அக்கட்சி பீகாரை தளமாக கொண்ட மாநிலக் கட்சி. அது பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லை. நிதீஷ் குமார்தான் எங்களது முதல்வர் வேட்பாளர். இதை நாங்கள் தெளிவாக கூறி விட்டோம். எங்களுக்கும் எல்ஜேபிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனேவே சிராக் பாஸ்வான் விவகாரத்தில் எங்களிடம் எந்த ரகசியமும் இல்லை.
ஆர்ஜேடி
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டாலும் கூட நாங்கள் ஆர்ஜேடியுடன் கை கோர்க்க வாய்ப்பில்லை. குறிப்பாக ஜேடியூ, காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணிக்கும் கூட வாய்ப்பில்லை. எங்களுக்கும் ஆர்ஜேடிக்கும் உறவு வருவதற்கான வாய்ப்பும் சுத்தமாக இல்லை. இந்த கேள்வியே தேவையற்றது. நாங்கள் உண்மையில் லாலுவின் ஊழலை அம்பலப்படுத்தியவர்கள். அப்படி இருக்கும்போது அவர்களுடன் நாங்கள் எப்படி கை கோர்க்க முடியும்" என்றார் ரவிசங்கர் பிரசாத்.