பாஜக கூட்டணியில் முதல் ஷாக்.. அமித் ஷாவின் 'கனவு திட்டத்தை' அமல்படுத்த நிதிஷ் குமார் மறுப்பு
பாட்னா: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிய பிறகு, அடுத்த கட்டமாக தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
2024 ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டில் சட்டவிரோதமாக குடியேறிய அனைவரையும் வெளியேற்றுவது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என்பதும் அமித்ஷா கருத்து.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் வந்து குடியேறி உள்ள முஸ்லிம்களை தான் பொதுவாக அமித்ஷா இவ்வாறு குறிப்பிட்டு பேசுவது வழக்கம். இந்த நிலையில்தான் சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த குழு ஒன்று, பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான, நிதீஷ் குமாரை, சந்தித்து தங்கள் கவலையை தெரிவித்தது. அவர்களுக்கு சமாதானம் கூறி அனுப்பி வைத்திருந்தார் நிதிஷ்குமார்.
இது நீதிமன்ற வேலையில்லை.. வருமான வரி தரப்பும், அமைச்சர் விஜயபாஸ்கருமே முடிவு செய்யணும்.. ஹைகோர்ட்
இந்த நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்துவீர்களா என்ற நிருபர்களின் கேள்விக்கு, பீகாரில் எதற்காக அமல்படுத்த வேண்டும் என்று பதில் கேள்வி கேட்டார் நிதிஷ்குமார்.
இதன் மூலம் பாஜக கூட்டணியில் உள்ள ஒரு கட்சி தேசிய குடிமக்கள் பதிவு நடைமுறைக்கு ஒத்துழைக்க முதல் முறையாக மறுப்பு தெரிவித்து உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தேசிய குடிமக்கள் சட்டத் திருத்தத்திற்கே, நாடு முழுக்க இவ்வளவு எதிர்ப்பு வரும் நிலையில், தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்திற்கு இதைவிட அதிக எதிர்ப்பு வரலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் நிதிஷ்குமார் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.
தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம். ஆனால் அந்தக் கட்சியும் கூட தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்தை ஒடிசா மாநிலத்தில் செயல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
இந்த கட்சி பாஜக கூட்டணியில் இல்லை என்ற போதிலும் கூட, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக தான் வாக்கு அளித்து இருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் அந்த கட்சியும் பின் வாங்கியுள்ளது. நாடு தழுவிய அளவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பு ஒவ்வொரு கட்சிகளையும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்னோக்கி செய்ய வைத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.