இஃப்தார்... மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் தாக்கு!
பாட்னா: இஃப்தார் விருந்து விவகாரத்தை முன்வைத்து விமர்சித்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை கடுமையாக தாக்கியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
பீகாரில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இருப்பினும் பாஜகவுக்கும் ஜேடியூவுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் மத்தியில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜேடியூவைப் பொறுத்தவரையில் அமைச்சரவையில் 2 இடங்களைக் கேட்டது. ஆனால் பாஜக இதனை நிராகரித்து ஒரு அமைச்சர் பதவி மட்டும்தான் என கறார் காட்டியது. மேலும் அமைச்சரவையில் இடம் என்பது சம்பிராதயமான நடவடிக்கை எனவும் பாஜக கூறியிருந்தது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த நிதிஷ்குமார், சம்பிராதயமாக அமைச்சரவையில் இடம்பெறுவதை நாங்கள் விரும்பவில்லை என அறிவித்தார். அதே நேரத்தில் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
பின்னர் பீகார் திரும்பிய நிதிஷ்குமார் அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார். பாஜகவினர் ஒருவருக்கு கூட அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் அளிக்கவில்லை. இதனால் பாஜக- ஜேடியூ இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனிடையே மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தமது ட்விட்டர் பக்கத்தில், பாட்னாவில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் நிதிஷ் குமார், பாஜகவின் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, லோக் ஜனசக்தி கட்சியினர் பங்கேற்ற படத்தை பகிர்ந்திருந்தார். அதில், இஃப்தார் விருந்தில் இப்படி இணைகின்றவர்கள் ஏன் நவராத்திரி பண்டிக்கைக்கு ஒன்றுசேருவதில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
இது அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையாகி இருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த நிதிஷ்குமார், சிலர் எப்போதும் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள் ஒருவிஷயத்தை மறந்துவிடுகின்றனர். ஒவ்வொரு மதமும் அன்பையும் மரியாதையையும் தான் போதிக்கின்றன என்றார்.
கிரிராஜ் சிங்- நிதிஷ்குமார் இடையேயான இம்மோதலால் பாஜக மற்றும் ஜேடியூ கூட்டணியில் விரிசல் அதிகரித்துள்ளது என்கின்றன பீகார் அரசியல் வட்டாரங்கள்..