RJD ஆட்சியில் ஒரு பள்ளியாவது திறக்கப்பட்டதா...? உன் அப்பாவிடம் கேள்.. தேஜஸ்வி மீது நிதிஷ் தாக்கு..!
பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்த போது பீகாரில் ஒரு பள்ளியையாவது திறந்ததுண்டா என ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சி, அதிகாரம் என கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் ஊழல் செய்வதற்கு மட்டுமே ஆர்.ஜே.டி. பயன்படுத்திக் கொண்டதாக நிதிஷ் சாடியுள்ளார். வழக்கமாக கூலாக பிரச்சாரம் செய்யக்கூடிய நிதிஷ்குமார் இந்த தேர்தலை பொறுத்தவரை சற்று சூடான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி வருகிறார்.
இதற்கு காரணம் பீகார் முன்னாள் துணை முதலமைச்சரும் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் அவருக்கு கடுமையான முறையில் போட்டி கொடுத்து வருகிறார். கொஞ்சம் அசந்தாலும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளதால் நிதிஷ் தனது தூக்கத்தை தொலைத்து தேர்தல் பணிகளில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே பீகார் முதற்கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. லாலுவும் அவரது மனைவி ராப்ரி தேவியும் பீகார் முதலமைச்சராக இருந்தபோது ஒரு பள்ளிக்கூடமாவது கட்டியிருக்கிறார்களா எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த வரலாறை எல்லாம் உங்கள் பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பிறகு பிரச்சாரம் செய்யுங்கள் என தேஜஸ்வி யாதவை சீண்டியுள்ளார் நிதிஷ்குமார். தமது ஆட்சியில் ஊழல்வாதி என யாரேனும் ஒருவரையாவது உங்களால் கை நீட்ட முடியுமா என ஆர்.ஜே.டி. கட்சியினருக்கு கேள்வி எழுப்பிய நிதிஷ், நேர்மையான முறையில் ஆட்சி புரிந்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.
நான் சாகவேண்டும் என பில்லி சூனியம் செய்த லாலு பிரசாத்.. பாஜக சுஷில் மோடி புகாருக்கு தேஜஸ்வி மறுப்பு
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் இந்தக் கருத்துக்கு பதிலடி தந்துள்ள தேஜஸ்வி யாதவ், நிதிஷ் ஜீயின் இந்த பழமையான பேச்சைக் கேட்டு கேட்டு பீகார் மக்கள் சலிப்படைந்து விட்டதாகவும், யதார்த்த நிலையில் இருந்து நிதிஷ்குமார் விலகி நிற்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், கோடிக்கணக்கான பீகார் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டு இப்போது பழைய புராணத்தை மீண்டும் பாடத்தொடங்கியுள்ளதாக நிதிஷை விமர்சித்துள்ளார்.