என்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை: நிதிஷ்குமார்
பாட்னா: பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்.ஆர்.சி) நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பாஜகவின் கூட்டணியில் ஜேடியூ இடம்பெற்றுள்ள போதும் குடியுரிமை சட்ட திருத்தம் (சி.ஏ.ஏ), என்.ஆர்.சி. ஆகியவற்றை அக்கட்சி எதிர்த்து வருகிறது. நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக ஜேடியூ எம்.பிக்கள் வாக்களித்த போதே சர்ச்சை வெடித்தது.
ஜேடியூவின் துணைத் தலைவரான பிரஷாந்த் கிஷோர், கட்சியின் சி.ஏ.ஏ. ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகவே விமர்சித்து வருகிறார். அவருக்கு ஜேடியூவின் மூத்த தலைவர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
என்ன.. ட்ரம்ப் அப்படி சொல்கிறார்.. பென்டகன் இப்படி சொல்கிறது.. ஈரான் தளபதி கொலையில் திடீர் சர்ச்சை
காங்.-க்கு பிகே ஆதரவு
இதனால் சி.ஏ.ஏ, என்.ஆர்.சியை எதிர்க்க வேண்டிய நிலைக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் தள்ளப்பட்டார். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை பிரஷாந்த் கிஷோர் ஆதரித்தும் வருகிறார்.
ராகுல்- பிரியங்காவுக்கு பாராட்டு
இதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு நன்றி தெரிவித்தும் ட்விட்டரில் பிரஷாந்த் கிஷோர் பதிவிட்டிருந்தார். ஆனால் ஜேடியூவின் இந்நிலைப்பாட்டை பாஜக கடுமையாக விமர்சித்தும் வருகிறது.
நிதிஷ்குமார் திட்டவட்டம்
இந்நிலையில் பீகார் சட்டசபையில் இன்று பேசிய முதல்வர் நிதிஷ்குமார், என்.ஆர்.சி. என்பது அஸ்ஸாம் மாநிலத்துக்கு மட்டும்தான். அதை நாட்டின் பிற மாநிலங்களில் அமல்படுத்தப் போவது இல்லை என பிரதமர் மோடி தெளிவுபடுத்தியுள்ளார். ஆகையால் என்.ஆர்.சி.யை பீகாரில் நடைமுறைப்படுத்தும் பேச்சுக்கே இடம் இல்லை என கூறியுள்ளார்.
ஜேடியூ மீது விமர்சனம்
ஏற்கனவே பாஜகவின் பீகார் செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த், சி.ஏ.ஏ.வை எதிர்ப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்; இது இந்தியா.. இது ஒன்றும் அமெரிக்கா இல்லை.. இங்கே இரட்டை குடியுரிமை கிடையாது என விமர்சித்திருந்தார்.
பாஜக கூட்டணியில் விரிசல்
தற்போது நிதிஷ்குமார், என்.ஆர்.சியை நிச்சயம் நடைமுறைப்படுத்தப் போவது இல்லை என கூறியுள்ளார். பீகாரில் நிதிஷ்குமாரை மீண்டும் முதல்வர் வேட்பாளராக ஏற்க பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜேடியூவின் என்.ஆர்.சி.க்கு எதிரான திட்டவட்டமான நிலைப்பாடு பாஜகவுடனான கூட்டணியில் விரிசலை அதிகரித்திருக்கிறது.