ஆர்பாட்டம், மறியல் செய்தால் அரசு வேலையில் கிடையாது - பாஸ்போர்ட் பெறுவதிலும் சிக்கல் - எங்கு தெரியுமா
ஆர்ப்பாட்டம் அல்லது சாலை மறியல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசு வேலை மற்றும் எந்தவொரு அரசு ஒப்பந்தங்களும் கிடைக்காது என பீகார் மாநில காவல் துறை சார்பில் சுற்றறிக்கை வெளியா
பாட்னா: அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் அரசாங்க வேலைகள் அல்லது அரசுக்கு சொந்தமான மதுபான விற்பனை நிலையங்களை பெற முடியாது என்று பீகார் மாநில காவல்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பீகாரில் அம்மாநில டி.ஜி.பி. சிங்லால் உத்தரவின்பேரில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுக்கு சொந்தமான மது கடைகள், அரசு வேலை, துப்பாக்கி வைத்திருக்க உரிமம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க காவல் துறை சரிசார்ப்பு அவசியம். எந்தவொரு சட்டம் ஒழுங்கு நிலைமை, ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் போன்ற எந்தவொரு குற்றச் செயலிலும் ஒரு நபர் ஈடுபட்டு இருந்தால், இதற்காக அந்த நபர் மீது போலீசார் குற்றம் சாட்டி இருந்தால், அதனை காவல்துறையினர் தனிநபர் நடத்தை எழுத்து சரிபார்ப்பு அறிக்கையில் குறிப்பாகவும், திட்டவட்டமாகவும் குறிப்பிட வேண்டும்.
அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுப்பட்டவர்கள் அரசாங்க வேலைகள் அல்லது அரசுக்கு சொந்தமான மதுபான விற்பனை நிலையங்களை பெற முடியாது. ஆகையால் அவர்கள் கடுமையான விளைவுகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிதிஷ் குமார் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் , காவல்துறையின் சுற்றறிக்கையை பதிவேற்றம் செய்ததுடன், முசோலின் மற்றும் ஹிட்லருக்கு கடுமையான போட்டியை நிதிஷ் குமார் தருவதாக பதிவு செய்து உள்ளார்.
இதனிடையே அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்பவர்களுக்கும் தற்போது சிக்கல் எழுந்துள்ளது. பாஸ் போர்ட்டுகள் பெற விண்ணப்பிக்கும் போது போலீஸ் சரிபார்ப்பில் மக்களின் சமூக ஊடக இடுகைகள் கூட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உத்தரகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது.