நடுராத்தியில் ஆள்மாறாட்டம்.. உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ் அளித்து ஷாக் தந்த மருத்துவமனை!
பாட்னா: பீகாரில் உயிரோடு இருக்கும் கொரோனா நோயாளிக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுனுகுமார் (40) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 3ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மருத்துவமனை தரப்பில் இறப்புச் சான்றிதழும் வழங்கப்பட்டுவிட்டது. இதையடுத்து மின் மயானத்திற்கு சென்ற சுனுகுமாரின் மனைவி கவிதா தேவி, கணவரின் உடலை பார்க்க வேண்டும் என கோரினார்.
முகத்தை பார்க்க
இதையடுத்து அவர் கணவரின் முகத்தை பார்க்க கடைசியாக அனுமதிக்கப்பட்டது. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்தது தன்னுடைய கணவர் அல்ல என்றும் அது வேறு ஒருவரின் உடல் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் சுனுகுமார் உயிருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்தது.
கொரோனா
இதையடுத்து மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக இது போன்ற மிகப் பெரிய தவறு நடந்திருப்பதாக புகார் கொடுக்கப்பட்டதன் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுனு குமாருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா இருந்தது தெரியவந்தது.
மருத்துவமனை நிர்வாகம்
சுனு குமார் கொரோனா நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த கொரோனா நோயாளி புருனியாவை சேர்ந்த ராஜ்குமார் பகத் (45) என்பவருக்கு இடம் அளிப்பதற்காக சுனு குமார் வேறு ஒரு வார்டுக்கு மாற்றப்பட்டார். இரு நோயாளிகளும் இரவு நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதால் அவர்களுடைய மருத்துவ ஆவணங்களை மாற்ற மருத்துவமனை நிர்வாகம் மறந்துவிட்டது.
இறந்தவர் யார்?
இந்த நிலையில் பகத் திடீரென சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இதையடுத்து குமாரின் உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் சுனுகுமாரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்த போது இறந்தவர் சுனுகுமார் இல்லை என்பது தெரியவந்தது.