பீகாரில் மூளைக் காய்ச்சலால் 111 குழந்தைகள் பலி.. அலட்சியம் காரணம் என நிதிஷ்குமாருக்கு எதிராக வழக்கு
Recommended Video
பாட்னா: பீகாரில் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு மாநில அரசின் அலட்சிய போக்கே காரணம் என கூறி முதல்வர் நிதிஷ்குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
பீகாரில் கோடை வெயில் உச்சமாக உள்ளது. தண்ணீருக்காக மக்கள் திண்டாடி வரும் நிலையில் குறிப்பிட்ட ஒரு நோய் காரணமாக குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் உயிரிழக்கும் சம்பவம் நடந்தது.
இதுகுறித்து மருத்துவமனையில் நடத்திய ஆய்வில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. பீகாரில் மூளைக் காய்ச்சலால் நேற்று வரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
நேற்றைய தினம் முஸாஃபர்நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை பார்வையிட முதல்வர் நிதிஷ்குமார் சென்றார். அப்போது குழந்தைகள் இறப்பு குறித்தும் நோய்க்கான காரணம் குறித்து உடனடியாக ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொது நலன் வழக்கு
இன்றைய தகவலின் படி மூளைக்காய்ச்சலால் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 111-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நிதிஷ்குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.
தோல்வி
அதில் 111 குழந்தைகள் இறந்துள்ளதற்கு நிச்சயம் மாநில அரசின் அலட்சியபோக்கே காரணம். இது அரசு இயந்திரத்தின் முழு தோல்வியாகும். திறமையான மருத்துவர்களும், அனுபவம் வாய்ந்த நிபுணர்களும், உரிய மருத்துவ வசதிகளும் இல்லாததே இத்தனை குழந்தைகள் இறப்புக்கு காரணமாகும் என வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க திறமைவாய்ந்த மருத்துவ குழுவை நியமிக்கவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பெயர் சேர்ப்பு
அந்த வழக்கில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், பீகார் சுகாதாரத் துறை அமைச்சர் மங்கள் பாண்டே, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஷ்வினி சவுபே ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.